"சொர்க்கமே என்றாலும் இந்தியாவை போல வருமா.." குடும்பத்துடன் டெல்லியில் செட்டிலான அமெரிக்க பெண்! செம
டெல்லி: இந்தியாவை விட வெளிநாட்டு வாழ்க்கையே சிறப்பானது என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் வெளிநாட்டை விட இந்தியாவில் வாழ்வதே மகிழ்ச்சியையும் நிறைவையும் தருவதாக அமெரிக்கப் பெண் ஒருவர் மனம் திறந்து பேசியுள்ளார். இந்தியா ரொம்பவே பிடித்துப் போக அவர் இப்போது இங்கேயே செட்டிலாகிவிட்டாராம்.
எப்படியாவது நல்லா படிச்சு வெளிநாட்டிற்குப் போய் விட வேண்டும்.. இந்த டயலாக்கை நம்மில் பலரும் சுற்றி இருப்பவர்கள் சொல்லி நாம் கேட்டிருப்போம். வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டால் நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்பதே பலரது நினைப்பு.

ஆனால், உண்மையில் வெளிநாட்டில் வாழ்வது அவ்வளவு ஜாலியானது இல்லை.. பல கஷ்டங்கள் உள்ளன. வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்களிடம் கேட்டால் அது உங்களுக்குப் புரியும். அதேபோல வெளிநாட்டில் இருந்து இந்தியா வருவோரும் நம் நாட்டின் கலாச்சாரத்தைப் பார்த்துப் பிரமித்துப் போவார்கள்.
அமெரிக்கப் பெண்: அப்படி தான் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டன் பிஷ்ஷர் என்பவர் கடந்த 2017இல் தனது கணவருடன் முதன்முதலில் இந்தியாவுக்கு வந்துள்ளார். அப்போதே அவருக்கு இந்தியா ரொம்பவே பிடித்துப் போய்விட்டதாம். இதற்கிடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் நிரந்தரமாக டெல்லிக்குக் குடிபெயர்ந்துவிட்டார். இப்போது அவர் தனது மூன்று குழந்தைகளுடன் இந்தியாவிலேயே வசித்து வருகிறார்.
இதற்கிடையே அமெரிக்காவை விட ஏன் இந்தியா பெஸ்ட் என்பதை விளக்கி அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் எப்போதும் மக்கள் தனிமையை உணர்வார்கள் என்ற அவர், அங்கு இந்தியாவைப் போன்ற வலுவான சமூகமாக மக்களைப் பார்ப்பதே அரிது என்றார். வாழ்க்கை என்பதைப் பணத்தைத் தாண்டியது என்ற அவர், அமெரிக்கா தனக்குத் தராத பெரும் மகிழ்ச்சியையும் நிறைவையும் இந்தியா தந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நெகிழ்ச்சி வீடியோ: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "என்னைப் பார்க்கும் எல்லாரும் என்னிடம் கேட்கும் ஒரே கேள்வி- ஏன் அமெரிக்காவை விட்டு இந்தியாவில் செட்டில் ஆனீர்கள் என்பது தான். இதன் மூலம் அவர்கள் சொல்வது இரண்டே விஷயங்கள்.. இந்தியாவில் வாழ்க்கைத் தரம் சிறப்பாக இருக்காது.. வாழ மிகச் சிறந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவை விட்டு வெளியேறிய நான் எடுத்த முடிவு கிறுக்குத்தனமானது.. இதைத் தான் அவர்கள் சொல்ல வருகிறார்கள்.
இதற்கான பதிலை நான் சொல்கிறேன். இதற்காக என்னைத் தப்பாக நினைக்க வேண்டாம். நான் எனது நாடான அமெரிக்காவை நேசிக்கிறேன்.. நான் அங்கு தான் வளர்ந்தேன். எனக்கு அங்கு குடும்பம் உள்ளது. அது ஒரு சிறந்த இடம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.. ஆனால், எல்லா வகையிலும் அமெரிக்கா சரியான இடம் எனச் சொல்ல முடியாது. அமெரிக்காவில் நிறையப் பிரச்சினைகள் உள்ளன.
வாட்டும் தனிமை: அமெரிக்காவில் மிகவும் தனிமையை உணர்வீர்கள்.. சமூகம் அங்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் சக மனிதர்களுக்கு உதவ முன் வர மாட்டார்கள். மறுபுறம் இந்தியா, வாழ மிகச் சிறந்த ஒரு இடமாக இருக்கிறது. பன்மைத்துவம், கலாச்சாரம், ஒற்றுமை உணர்வு மக்களிடம் அதிகம் இருக்கிறது. தங்களால் முடிந்தவரை மக்களுக்கு உதவுகிறார்கள். இங்கு எனது குழந்தைகளைச் சிறப்பாக வளர்க்க முடியும் என நம்புகிறேன்.
இந்தியாவில் நீங்கள் ஒருபோதும் தனிமையை உணர மாட்டீர்கள். எங்குச் சென்றாலும் உங்களைச் சுற்றி மக்கள் இருப்பார்கள். நான் அமெரிக்காவில் பல இந்தியர்களைச் சந்தித்துள்ளேன். அவர்கள் அனைவரும் தனிமையை உணர்வதாகவே தெரிவித்துள்ளனர்.
பணம் மட்டும் வாழ்க்கை இல்லை: அமெரிக்காவில் இருந்தால் அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. பணம் சம்பாதிப்பது மட்டுமே உங்கள் லட்சியம் என்றால் அமெரிக்கா உங்களுக்குச் சரியான இடமாக இருக்கும். ஆனால் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதை விட நிறைய இருக்கிறது என்று நான் நம்புகிறேன். எனக்கு மகிழ்ச்சி மற்றும் நிறைவை இந்தியா தான் தருகிறது. இதன் காரணமாகவே நான் இந்தியாவிற்கு வந்துவிட்டேன்" என்றார்.
அவரது வீடியோ இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது. பலரும் அவரது கருத்தை ஆமோதித்துப் பதிவிட்டு வருகிறார்கள். அதேநேரம் இந்தியாவில் உள்ள சாதிய பாகுபாடுகள், பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவற்றையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு சிலர் பதிவிட்டு வருகிறார்கள். ஆனா.. அமெரிக்கப் பெண் இந்த வீடியோவுக்கு உங்க கருத்து என்ன!












Click it and Unblock the Notifications