தடுப்பூசிகளே இல்லை, வேக்சின் பாஸ்போர்ட்டை கட்டாயமாக்க கூடாது.. இந்தியா கடும் எதிர்ப்பு.. காரணம் என்ன
டெல்லி: கொரோனா தடுப்பூசிகள் இன்னும் வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளுக்குச் சென்று சேரவில்லை என்பதால் பிரிட்டன் பிரதமர் அறிவித்த வேக்சின் பாஸ்போர்ட் திட்டத்திற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது.
Recommended Video
உலகின் பல நாடுகளிலும் கொரோனா தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளில் அனைத்து நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இருப்பினும், வளர்ந்த நாடுகள் அதிகளவில் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்துள்ளதால், வளரும் நாடுகளுக்குச் சரியான நேரத்தில் தேவையான தடுப்பூசிகள் கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஜி7 மாநாடு
இந்நிலையில், அடுத்த மாதம் ஜி7 மாநாடு பிரிட்டன் நாட்டில் நடைபெறவுள்ளது. ஜி7 நாடுகளைத் தவிர இந்தியா, தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் வேக்சின் பாஸ்போர்ட் திட்டத்தை முன்மொழியப் போவதாகப் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். இதன் மூலம் கொரோனா பரவல் குறைவாக உள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்காமல் இருப்பதைக் கட்டுப்படுத்த முடியும் என்பது அவரது திட்டம்.
இந்தியா ஆட்சேபனை
இருப்பினும், இந்தத் திட்டத்திற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளது. நேற்று ஜி 7 பிளஸ் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சுகாதாரத் துறை ஹர்ஷ் வர்தன், இதில் இந்தியாவின் நிலைப்பாட்டைத் தெளிவாகக் கூறியுள்ளார். வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளில் மக்கள் தொகையில் குறைந்தளவே கிடைப்பதால் இந்த வேக்சின் பாஸ்போர்ட் திட்டம் பாரபட்சமான ஒரு திட்டம் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரிட்டன் அறிக்கை
அனைத்து நாடுகளுக்கும் தடுப்பூசி கிடைத்த பிறகே, வேக்சின் பாஸ்போர்ட் திட்டத்தை அமல்படுத்துவது அர்த்தமுள்ளதாக இருக்கும் என பிரிட்டனும் ஒப்புக்கொண்டதாகவே தெரிகிறது. கூட்டத்திற்குப் பிறகு பிரிட்டன் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனாவை கட்டுப்படுத்த சர்வதேச ஒருங்கிணைப்பு தேவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். தற்போது உலக சுகாதார மையம் அறிவித்துள்ள நெறிமுறைகளின்படி தடுப்பூசி சான்றிதழ்கள் குறித்து நாம் பரிசீலனை செய்யலாம். அதேநேரம், நமது கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட நாடுகளுக்குப் பாதகமாக அமைந்துவிடக் கூடாது" என்று அதில் கூறப்பட்டிருந்தது.
வேக்சின் பாஸ்போர்ட் என்றால் என்ன
வேக்சின் பாஸ்போர்ட்டில் ஒருவர் எடுத்துக்கொண்ட தடுப்பூசி தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். இதை வைத்திருப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது கொரோனா தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நடைமுறைகளில் இருந்து விலக்கு பெற முடியும். மேலும் அந்த நபர் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருப்பதால், அவர் மூலம் கொரோனா பரவாது என்பதையும் உறுதியாகக் கூறிவிட முடியும்.
இந்தியாவுக்கு சிக்கல்
இந்தியாவில் போதியளவில் தடுப்பூசி கிடைக்காமல் இருப்பது ஒரு பிரச்சினையாக இருக்கும் நிலையில், வேக்சின் பாஸ்போர்ட் திட்டத்தால் மற்றொரு தலைவலியும் உள்ளது. அதாவது உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்த தடுப்பூசிகள் மட்டுமே வேக்சின் பாஸ்போர்ட் திட்டத்தில் செல்லுபடியாகும். ஆனால், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களில் வெளிநாடுகளுக்குச் செல்வதில் சிக்கல் ஏற்படலாம். இருப்பினும், வரும் வாரங்களில் விரைவில் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கும் என்றே பாரத் பயோடெக் தெரிவித்துள்ளது.