மாஸ்க் போடணுமா! சீனாவை முந்தியது இந்தியா.. காற்று மாசில் டெல்லி முதலிடம்.. மோசமாகும் நிலைமை
டெல்லி: உலகின் மிக மோசமாக காற்று மாசால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் டெல்லி முதல் இடத்தை பிடித்துள்ளது. ஏற்கெனவே காற்று மாசால் இந்தியாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டு வரும் நிலையில் இந்த ஆய்வு அறிவிப்பு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
இந்த ஆய்வில் கொல்கத்தா 8வது இடத்திலும் மும்பை 14வது இடத்திலும் உள்ளது. இதனைத் தொடர்ந்து முதல் 20 இடங்களில் வேறெந்த இந்திய நகரங்களும் இடம்பெறவில்லை.
இந்த அதிக காற்று மாசால், சீனாவின் பெய்ஜிங்கில் 1,00,000 பேரில் சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இந்த எண்ணிக்கை 106 ஆக உள்ளது.

ஆய்வு
ஹெல்த் எஃபெக்ட்ஸ் இன்ஸ்டிடியூட் (HEI) மேற்குறிப்பிட்டுள்ள இந்த புள்ளி விவரங்களை ஆய்வின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வுக்கு சுமார் 7,000 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. ஆனால் இதில், 6 பிராந்தியங்களில் உள்ள 103 நகரங்களில்தான் இந்த காற்று மாசு அதிக அளவில் பதிவாகியுள்ளதாக HEI தெரிவித்துள்ளது. இந்த காற்று மாசால் இதயம் அல்லது நுரையீரல் சார்ந்த நோய்கள், கடுமையான மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்படுகிறது.

பாதிப்பு
இதை மருத்துவர்கள் PM2.5 பாதிப்பு என்று குறிப்பிடுகின்றனர். அதாவது காற்றில் உள்ள நுண் துகள்கள் 2.5 அளவை விட குறைவானதாக இருக்க வேண்டும். இதைவிட அதிகமாக இருந்தால் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பால் உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்படுகிறது. மேற்குறிப்பிட்டதைப்போல, PM2.5 பாதிப்பால் சீனாவின் பெய்ஜிங்கில் 1,00,000 பேரில் சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இந்த எண்ணிக்கை 106 ஆக உள்ளது. கொல்கத்தாவில் இந்த பாதிப்பால் 99 பேர் உயிரிழக்கின்றனர். HEI வெளியிட்டுள்ள காற்று மாசு அதிகம் உள்ள நகரங்களின் பட்டியலில் முதல் 20 இடங்களில் சீனாவின் 5 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

வரையறை
அதேபோல மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தும் NO2 எனப்படும் 'நைட்ரஜன் ஆக்ஸைடு' அதிக அளவில் வெளியிடப்படும் நகரங்களின் பட்டியலில் சீனா அதிக நகரங்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள பல நகரங்கள் இந்த PM2.5 மற்றும் NO2 வெளியேற்றும் அளவுகளை கடுமையாக மீறியுள்ளன. உலக சுகாதார அமைப்பு இம்மாதிரியான காற்று மாசைக் கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வரையறுத்துள்ளது. ஆனால் HEI குறிப்பிட்டுள்ள இந்நகரங்கள் இந்த விதிமுறைகளை மீறியுள்ளன.

மீறல்
கடந்த 2019ம் ஆண்டு ஆய்வின்படி, டெல்லியில் காற்றில் ஒரு கனமீட்டருக்கு PM2.5 அளவு 110 மைக்ரோகிராம்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இது ஒரு கன மீட்டருக்கு 5 மைக்ரோகிராம்தான் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி பார்த்தால் இந்த மாசு WHO குறிப்பிட்டுள்ளதைவிட சுமார் 22 மடங்கு அதிகமாகும். இதுவே கொல்கத்தாவை பொறுத்த அளவில் ஒரு கன மீட்டருக்கு சராசரியாக 84 மைக்ரோகிராம் இருக்கிறது.

உயிரிழப்பு
இது எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனில், 2019ம் ஆண்டில் மட்டும் சுமார் 29,900 பேர் இந்த காற்று மாசு பாதிப்பால் டெல்லியில் உயிரிழந்துள்ளனர். இதிலிருந்து காற்று மாசின் தீவிரத்தை நம்மால் உணர முடியும். சீனாவின் பெய்ஜிங் நகரில் இந்த உயிரிழப்பு 26,270 ஆகவும், கொல்கத்தாவில் 21,380 ஆகவும், மும்பையில் 16,020 ஆகவும் பதிவாகியுள்ளது. இது ஒருபுறம் இருக்க மறுபுறத்தில், சீனாவின் ஷாங்காய் நகரில் NO2 எனப்படும் நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றம் என்பது ஒரு கன மீட்டர் காற்றில் 41.6 மைக்ரோகிராம்களிலும், ரஷ்யாவின் மாஸ்கோவில் 40.2 மைக்ரோகிராம்களும் உள்ளன.

ஆய்வு வசதி
அதாவது WHO அறிவுறுத்தலின்படி இது ஒரு கன மீட்டர் காற்றில் வெறும் 10 மைக்ரோகிராம்கள்தான் இருக்க வேண்டும். பொதுவாக உலகம் முழுவதும் இந்த இரண்டு காற்று மாசுக்கும் பெரிய இடைவெளி இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன. அதாவது வளர்ந்து வரும் நாடுகளில் PM2.5 பாதிப்பு வளர்ந்த நாடுகளில் NO2 பாதிப்பும் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 195 நாடுகளில் சுமார் 117 நாடுகளில் மட்டுமே இந்த PM2.5 பாதிப்பை கண்டறியும் ஆய்வு வசதிகள் உள்ளன. அதேபோல வெறும் 74 நாடுகளில் மட்டுமே NO2 பாதிப்பை கண்டறியும் ஆய்வகங்கள் உள்ளன என HEI கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications