வெறும் 8 நிமிடங்களில்.. சென்ட்ரல் டூ தாம்பரம்.! மிரள வைக்கும் சென்னை நிறுவனம்! இது எப்படி சாத்தியம்?
டெல்லி: உலகின் சில நாடுகளில் டிராபிக் பிரச்சினைகளைத் தாண்டி சரியான நேரத்தில் மக்களுக்குச் சிகிச்சை அளிக்க ஏர் ஆம்புலன்ஸ் சேவையை வைத்துள்ளன. அந்த வரிசையில் இப்போது இந்தியாவும் இணையவுள்ளது. இதற்காக 1 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் பல நகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருக்கிறது. பெங்களூர், டெல்லி, சென்னை, மும்பை என டிராபிக்கில் திணறும் பல நகரங்களைச் சொல்லலாம்.

ஏர் ஆம்புலன்ஸ்
டிராபிக் சிக்கலால் விபத்தில் சிக்குவோர், நோய்வாய்ப்பட்டு இருப்போருக்குச் சரியான நேரத்தில் சிகிச்சை தர முடிவதில்லை. ஆம்புலன்ஸ்களும் டிராபிக்கில் மாட்டிக் கொள்வதால் பல விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழக்க நேரிடுகிறது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய சில நாடுகளில் ஏர் ஆம்புலன்ஸ் உள்ளன. டிராபிக்கை தாண்டி ஏர் ஆம்புலன்ஸ்களால் சரியான இடங்களுக்குச் செல்ல முடியும். மேலும், இது ஹெலிகாப்டரை போல ஒரே இடத்தில் இருந்து மேலே இறங்கவும் லேண்ட் செய்யவும் முடியும் என்பதால் கூடுதல் இடங்கள் தேவையில்லை.
அதிநவீன ஏர் ஆம்புலன்ஸ்கள் வளர்ந்த நாடுகளிடையே மட்டும் அதிகம் இருந்த நிலையில், சீக்கிரம் அது இந்தியாவுக்கும் வரவுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏர் ஆம்புலன்ஸ்கள் இங்கு வரவுள்ளது.. அதுவும் நம்ம சென்னை ஐஐடியை தளமாகக் கொண்டு இயங்கும் ePlane நிறுவனம் தான் இதை உருவாக்கியுள்ளது என்பது தனிச்சிறப்பாகும். இதற்காக ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
788 ஏர் ஆம்புலன்ஸ்
மின்சாரத்தில் இயங்கும் இந்த ஏர் ஆம்புஸன்களை இ-பிளான் நிறுவனம் தயாரித்துத் தரும். மொத்தம் 788 ஏர் ஆம்புலன்ஸ்களை தயாரித்து நாட்டின் முன்னணி ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனமான ICATT-க்கு வழங்கப்படும். அவர்கள் நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ்களை களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர். நாட்டின் முக்கிய நகரங்களில் டிராபிக் பெரிய பிரச்சினையாக மாறி வரும் சூழலில், அதைச் சமாளிக்க இது உதவும். மேலும், இது மின்சார விமானங்கள் என்பதால் சுற்றுச்சூழலுக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது.

தற்போதைய ஒப்பந்தம் போடப்பட்டாலும் கூட பல்வேறு வகையான தர மற்றும் பாதுகாப்பு சோதனைகளை விமானம் கிளியர் செய்ய வேண்டி இருக்கிறது. அனைத்து வகையான சோதனைகளும் முடிந்த பிறகு 2026ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தான் இந்த இ-பிளேன் செயல்பாட்டிற்கு வரும் எனத் தெரிகிறது. எல்லாம் திட்டமிட்டபடி நடந்து இவை அடுத்தாண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வந்தால் இது இந்தியாவுக்கு மிகப் பெரிய மைல்கல்லாகவே இருக்கும்.
பல பில்லியன் டாலர் ஒப்பந்தம்
இது தொடர்பாக இ பிளேன் நிறுவனரும் சென்னை ஐஐடி பேராசிரியருமான சத்ய சக்கரவர்த்தி கூறுகையில், "தற்போது எங்கள் நிறுவனத்தால் ஆண்டுக்கு 100 பிளேன்களை தயாரிக்க முடியும். ஏர் ஆம்புலன்ஸ்களுக்கான பில்லியன் டாலர் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தனியாக நடைபெறும். அதேநேரம் மற்ற வகையான விமானங்களைச் சோதனை செய்ய எங்களுக்கு மேலும் $100 மில்லியன் தேவைப்படுகிறது. தற்போது வரை நாங்கள் முதலீட்டாளர்களிடமிருந்து $20 மில்லியன் திரட்டியுள்ளோம்" என்றார்.
ePlane நிறுவனம் மூன்று வகையான ஏர் ஆம்புலன்ஸ்களை உருவாக்கி வருகிறது. இதில் ஒரு பைலட், ஒரு துணை மருத்துவர், ஒரு நோயாளி மற்றும் ஒரு ஸ்ட்ரெச்சர் மற்றும் அத்தியாவசிய உயிர்காக்கும் மருத்துவ சாதனங்கள் இருக்கும். ஏர் ஆம்புலன்ஸ் அதிகபட்சம் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும்.. அதாவது இதே வேகத்தில் சென்றால் சென்னை சென்ட்ரல் முதல் தாம்பரம் வரையிலான 26 கிமீ தூரத்தை வெறும் 8 நிமிடங்களில் அடைந்துவிடலாம். மேலும், ஒரு முறை சார்ஜ் செய்தால் 110 கிமீ முதல் 200 கிமீ வரை செல்லும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications