கொரோனா 2ஆம் அலை.. அடுத்த மாதம் உச்சமடையும்.. 25 லட்சம் பேர் பாதிப்பு.. 'இது' மட்டுமே ஒற்றை நம்பிக்கை
டெல்லி: கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏப்ரல் இரண்டாம் பாதியில் உச்சமடையும் என்றும் தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே ஒரே நம்பிக்கை என்றும் எஸ்பிஐ வல்லுநர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் சில மாநிலங்களில் மரபணு மாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், கொரோனா வழிகாட்டுதல்களைப் பொதுமக்கள் முறையாகக் கடைப்பிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன் வைக்கப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்தவும் அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை
இந்நிலையில் கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்துள்ளது, நாட்டில் கொரோனா பரவல் இரண்டாம் அலை தொடங்கிவிட்டதையே காட்டுவதாக எஸ்பிஐ வல்லுநர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா பரவலின் இரண்டாவது அலை 100 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது உச்சமடையும்
தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏப்ரல் பிற்பகுதியில் உச்சமடையும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் சுமார் 25 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர், அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு காரணமாகப் பொருளாதார நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளதால் மாவட்ட ரீதியிலும் குறிப்பிட்ட பகுதிகளிலும் மட்டும் அமல்படுத்தப்படும் ஊரடங்கு பெரியளவில் பலன் தராது. நாடு தற்போது இருக்கும் சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஒரே வழி என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தினசரி 34 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், அதை 45 லட்சமாக உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 53,476 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஐந்து மாதங்களிலேயே தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தைக் கடந்தது இதுவே முதல்முறையாகும். இதன் மூலம் நாடு முழுவதும் தற்போது வரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,17,87,563ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 251 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்,