வந்தாச்சு ஸ்ப்ரே.. மூக்கில் செலுத்தினால் போதும்.. புதிய கொரோனா தடுப்பு மருந்து! இந்தியாவில் அனுமதி
டெல்லி: இந்தியாவில் மூக்கின் வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்து குறித்த பல்வேறு முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
சீனாவில் 2019 இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. படிப்படியாக பல நாடுகளுக்கு வைரஸ் பரவிய நிலையில் இந்தியாவில் 2020 துவக்கத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டது.
தற்போது வரை கொரோனா வைரஸ் 3 அலைகளாக தாக்கியுள்ளது. தற்போதும் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு குறைந்து இருந்தாலும், அவ்வப்போது பலி எண்ணிக்கை அதிகரித்து வருவது வருத்தமளிக்கும் விஷயமாகும்.

தடுப்பூசி
கொரோனாவில் இருந்து தப்பிக்க கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி உள்பட பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதிகபட்சமாக இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியும், பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் 170.9 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மூக்கு வழியே செலுத்தும் மருந்து
இந்நிலையில் கொரோனா வைரஸை அழிக்கும் வகையில் மூக்கின் வழியே செலுத்தும் மருந்தை மும்பையை சேர்ந்த கிளைன்மார்க் நிறுவனம் கனடாவின் சனோடைஸ் நிறுவனத்துடன் இணைந்து கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தை கொரோனா பாதித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பயன்படுத்தலாம். இதை இந்தியாவில் தயாரித்து விற்பனை செய்ய இந்திய பொதுமருந்து கட்டுப்பாட்டு மற்றும் முறைப்படுத்துதல் ஜெனரலிடம் இருந்து கிளைன்மார்க் நிறுவனத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.

ரசாயன தடை
இந்த மருந்து தொடர்பான முக்கிய அம்சங்கள் வருமாறு: நைட்ரிக் ஆக்சைட் நாசல் ஸ்பிரே என பெயரிடப்பட்ட இந்த மருந்து பாபி ஸ்பிரே என விற்பனை செய்யப்பட உள்ளது. மூக்கின் வழியே மருந்து செலுத்தியபின் உடலில் கொரோனா வைரசுக்கு எதிரான ரசாயன தடையை உருவாக்கும். மேலும் சுவாசபாதையின் துவக்கத்திலேயே வைரசை அழிக்கும். இதன்மூலம் நுரையீரலுக்கு வைரஸ் செல்வது தடுக்கப்படும்.

முடிவு ஆதாரம் இல்லை
இருப்பினும் அந்த நிறுவனம் புதிய மருந்து தொடர்பான எந்த பரிசோதனை முடிவுகளின் ஆதாரங்களையும் இன்னும் வெளியிடவில்லை. ஆனால் அதற்குள் ஐரோப்பிய யூனியனில் மருந்துக்கான ‛CE'குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இது மருந்து விற்பனை செய்வதற்கான அங்கீகாரமாகவும் கருதப்படும். இதுதவிர பக்ரைன், இஸ்ரேல் நாடுகளிலும் இந்த மருந்து விற்பனை செய்யப்பட உள்ளது.

99 சதவீதம் அழிக்கும்
மருந்து குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ‛‛நைட்ரிக் ஆக்சைடு நாசல் ஸ்பிரே மருந்தின் 3ம் கட்ட பரிசோதனை முடிவுகள் ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது. 24 மணிநேரத்தில் வைரசின் 94 சதவீதத்தையும், 48 மணிநேரத்தில் 99 சதவீதத்தையும் அழிக்கிறது. இந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு பாதுகாப்பானது'' என கூறியுள்ளது.

அன்றே சொன்ன டாக்டர்
2021 நவம்பரில் உலக சுகாதார அமைப்பின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன், ‛‛கொரோனா தடுப்பூசிக்கு மாற்றாக மூக்கு, வாய் வழியே செலுத்தும் மருந்துகள் குறித்த ஆராய்ச்சி நடைபெறுகிறது. இந்த மருந்துகள் இன்னும் 2 மாதத்தில் நடைமுறைக்கு வரும்'' என கூறியிருந்த நிலையில் தற்போது இந்த மருந்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications