ஒன்றல்ல இரண்டல்ல.. இந்தியாவில் நுழைந்த மொத்தம் 11 ஓமிக்ரான் வேரியண்ட்கள்.. விமான நிலையங்களில் பகீர்
டெல்லி: சில நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொடத் தொடங்கியுள்ள நிலையில், இது தொடர்பாக இந்தியாவிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 11 நாட்களில் மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நம்மைப் பாடாய்ப் படுத்திய கொரோனா பாதிப்பில் இருந்து நாம் இப்போது தான் மெல்ல நாம் மீண்டு வருகிறோம். உலக நாடுகளில் இப்போது தான் இயல்பு நிலை மெல்ல திரும்பி வருகிறது.
கொரோனா வேக்சின் தொடங்கி இதற்காக நாம் பல்வேறு முன்னெச்சரிக்கை பணிகளை எடுத்துள்ளோம். பெரும் போராட்டத்திற்குப் பின்னரே கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது கட்டுக்குள் வந்துள்ளது.
ஆட்டிப்படைக்கும் ஓமிக்ரான் BF.7 கொரோனா.. குழந்தைகளை தாக்கினால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்? பின்னணி
சீனா
ஒட்டுமொத்த உலகமே கடந்த பல மாதங்களுக்கு முன்பே, நாம் கொரோனா உடன் இணைந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டன. இருந்த போதிலும், சீனாவில் ஜீரோ கோவிட் பாலிசி அமலில் இருந்தது. அதாவது சிறியளவில் பாதிப்பு ஏற்பட்டாலும், மினி லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு, தொடர்புடைய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வந்தனர். இதற்கு மக்கள் மிகக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி சீன மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து வேறு வழியின்றி, சீனா கட்டுப்பாடுகளை நீக்கியது. ஆனால், இதுவே அந்நாட்டிற்கு எதிராக அமைந்துவிட்டது.
கட்டுப்பாடுகள்
சீனாவில் கட்டுப்பாடுகளை ஒரேயடியாக நீக்கியதால் வைரஸ் பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. அங்கு மருத்துவமனைகள் முழுக்க கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளன. தினசரி கொரோனா பாதிப்பு அங்குப் பல லட்சத்தைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தீவிர கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு அங்கு இந்தளவுக்கு மோசமாக உள்ளதால் வேறு வழியில்லாமல் இந்தியா உட்பட பல உலக நாடுகள் சீனாவுடனான விமான போக்குவரத்திற்குப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.
124 பேருக்கு கொரோனா
சீனா உட்பட சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மற்ற நாடுகளில் இருந்து வருவோருக்கும் அறிகுறிகள் இருந்தால் கொரோனா டெஸ்டிங் செய்யப்படுகிறது. இதனிடையே கடந்த 11 நாட்களில் மட்டும் உலக நாடுகளில் இருந்து இந்தியா திரும்பிய சுமார் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த டிசம்பர் 23 முதல் ஜனவரி 3 வரை பல்வேறு உலக நாடுகளில் இருந்து வந்த 19,227 பேரிடம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
11 ஓமிக்ரான் வேரியண்ட்கள்
அவர்களில் 124 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் செய்தி என்னவென்றால்.. அவர்கள் அனைவருக்கும் ஒரே போன்ற கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. அவர்களின் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்கு அனுப்பியதில்.. மொத்தம் 11 வகையான ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், அவை என்ன மாதிரியான ஓமிக்ரான் வகைகள் என்பது குறித்தும் அவை ஏற்கனவே இந்தியாவில் உள்ள ஓமிக்ரான் வகையா என்பது போன்ற தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மத்திய அரசு
உலகின் சில குறிப்பிட்ட நாடுகளில் சமீப காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் அலட்சியமாக இருக்காமல் மத்திய அரசு இப்போதே நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டது. பொதுமக்கள் மாஸ்க் அணிவது மற்றும் சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிப்பது போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், விமான நிலையங்களில் ரேண்டம் சோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஆலோசனை
முன்னதாக கொரோனா அச்சம் காரணமாகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கப் பிரதமர் மோடி அறிவுறுத்தினார். முன்னதாக கடந்த மாதம் நாடு கொரோனா முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்தப்பட்டது. அதில் கொரோனா பாதிப்பு ஏற்படும்போது, நோயாளிகள் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.