கொரோனாவுக்கு பிறகு.... வேலைக்கு சேருவதில் பெண்கள் முதலிடமாம்... ஆய்வில் தகவல்!
புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு துறைகளில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 20 சதவீதம் அளவுக்கு பணியாளர்கள் வேலைக்கு திரும்பி உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதுவும் ஆண்களை விட அதிக அளவு பெண்கள் மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளதாகவும், மருத்துவம் மற்றும் ஐடி துறைகளில் அதிக அளவு ஊழியர்கள் வேலைக்கு திரும்பி வருவதாகவும் அந்த ஆய்வு கூறியுள்ளது.
கொரோனா என்னும் அரக்கன் இந்தியா முழுவதும் சுழன்று அடித்ததால், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் அடியோடு முடங்கியது. தற்போது ஓரளவு முன்னற்றம் கண்டாலும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இந்த நிலையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையில் இருந்ததை விட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு மிளிர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இது தொடர்பாக வொர்க் இன்சின்க் மற்றும் மூவ்இன்சின்க் ஆகிய வேலைவாய்ப்பு துறை நிறுவனங்கள் நாடு முழுவதும் உள்ள 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களிடம் விவரம் சேகரித்து ஆய்வு நடத்தியது.
அந்த ஆய்வின்படி, கொரோனாவுக்கு முந்திய நிலையை விட 20% க்கும் அதிகமாக வேலைவாய்ப்பு அதிகரித்து உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த நவம்பரில் வேலைக்குத் திரும்பியவர்கள் எண்ணிக்கை கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 10 சதவீதமாக உயர்ந்துள்ளது என்றும் ஒட்டுமொத்தமாக, நாட்டில் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது நவம்பர் மாதத்தில் 375 சதவீதம் பேர் மீண்டும் பணிக்கு திரும்பி உள்ளதாக ஆய்வு மூலம் தகவல் கிடைத்துள்ளது.
கர்நாடக ஐடி நிறுவன ஊழியர்கள் மேலும் சில மாதங்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்- துணை முதல்வர்
ஆனால் பெங்களூரு, ஹைதராபாத் மெட்ரோ நகரங்களில் தற்போது கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட 5 சதவீதத்திற்கும் குறைவாகவே வேலைக்கு சேர்ந்து உள்ளனர். இருந்த போதிலும் இந்தியாவின் பிற பகுதிகளில் 20 சதவீத பணியாளர்கள் அலுவலகங்களுக்குத் திரும்பியுள்ளனர், அதுவும் ஆண் ஊழியர்களை விட பெண் ஊழியர்கள் அளவுக்கு அதிகமாக வேலைக்கு திரும்பி உள்ளனர்.
விளையாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுடன் (3 சதவீதம்) ஒப்பிடும்போது, பார்மா(மருத்துவம்) துறையில் (27 சதவீதம்) மற்றும் ஐடி, ஐடிஇஎஸ், பிபிஓ துறையில் (16 சதவீதம்) அதிக அளவு பணியாளர்கள் வேலைக்கு திரும்பி உள்ளதாக தெரிகிறது.கொரோனாவை தூக்கி வீசிவிட்டு இந்தியா மீண்டும் பழைய பாதையில் நடை போடுகிறது என்பதையே இந்த ஆய்வுகள் சுட்டுகின்றன.
2021 ஆம் ஆண்டில் தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஐடி, ஐடிஎஸ் மற்றும் பிபிஓ துறையில் கூடுதல் பணியாளர்கள் வேலைக்கு சேர்ந்து வருவதாகவும். 2021 மே க்குள் இது கொரோனா முந்தைய நிலைகளில் 50 சதவீதத்தையும், செப்டம்பர் மாதத்திற்குள் 80 சதவீதத்தையும் எட்டும் "என்று வொர்க்இன்சின்கின் தலைமை நிர்வாக அதிகாரி தீபேஷ் அகர்வால் நம்பிக்கை தெரிவித்தார்.