இனி சாதிவாரி கணக்கெடுப்பு தானா? நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சொன்ன பதில்.. இதுதாங்க!
டெல்லி: இந்தியாவில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுமா? இல்லையா? என்பது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் விளக்கமாக தெரிவித்துள்ளார்.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் எனக்கூறி பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலினிடம் வலியுறுத்த உள்ளதாக பாமக நிறுவனர் ராமாதாஸ் நேற்று முன்தினம் கூறினார்.
இந்தியாவை பொறுத்தமட்டில் கடந்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் இது நடக்கவில்லை. இந்நிலையில் தான் இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சர் பதில்
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, சாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற அவையில் சில கேள்விகள் எழுப்பப்பட்டு இருந்தது. இந்த கேள்விகளுக்கு இந்நிலையில் மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் இன்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அந்த பதலில் கூறப்பட்டுள்ளதாவது:

சாதிவாரி கணக்கெடுப்பு உண்டா?
இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கிறது. இதில் எஸ்சி, எஸ்டி பிரிவினரை தவிர மற்றவர்களை சாதிவாரியாக கணக்கெடுப்பு செய்தது இல்லை. அரசியலமைப்பின் 1950ம் ஆணை(பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினர்) ஆகியவற்றின் படி, எஸ்சி, எஸ்டி எனும் பிரிவு மக்கள் மட்டும் சாதிவாரியாக கணக்கெடுக்கப்படுகின்றனர்.

3 மாநிலங்கள் கோரிக்கை
தற்போது 3 மாநில அரசுகள், சில அமைப்புகள் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க கோரிக்கை விடுத்துள்ளன. அதன்படி வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரிய மேற்கொள்ள வேண்டும் என பீகார், மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன என கூறியுள்ளார்.

கொரானாவால் பாதிப்பு
மேலும் 2021ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தப்படும் என 2019 மார்ச் 28 ம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு 2021ல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பாக அடுத்த உத்தரவு வரும்வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

புதிய செயலி
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது கல்வி தகுதி, மதம், மொழி, திருமணம், குழந்தைகளின் எண்ணிக்கை, தொழில், உள்பட பல்வேறு சமூக பொருளாதார அளவுருக்களின் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. வரும் காலத்தில் நடக்கும் மக்கள் தொகை டிஜிட்டல் முறையாக இருக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக புதிய செயலி மற்றும் அதன் விபரங்களை சேகரிக்க தனியாக இணையதளம் உருவாக்கப்படும்'' என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications