வந்தே பாரத் ரயிலின் ஸ்மால் வெர்ஷன்.. விரைவில் வருகிறது 'வந்தே மெட்ரோ' இதுல என்ன ஸ்பெஷல்?
டெல்லி: இந்தியாவின் செமி ஹை ஸ்பீட் ரயிலாக அறியப்படும் வந்தே பாரத் ரயில் நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடங்கப்பட்டு வரும் நிலையில், வரும் 2024 ஆம் ஆண்டிற்குள் முற்றிலும் இந்தியாவில் தயார் செய்யப்படும் வந்தே மெட்ரோ ரயிலை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபடியாக நவீன வசதிகள் கொண்ட வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
நாடு முழுவதும் 75 நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை 8 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசியலை புரட்டி போடும் பாரத் ஜோடோ யாத்திரை? ராகுல் சாதித்தது என்ன! காங். எதிர்காலம் மாறுமா
ரூ.735 கோடியில் மறுசீரமைப்பு
வந்தே பாரத் ரயிலில் உள்ள சொகுசு வசதிகள் உள்ளிட்டவைக்கும் பயணிகளை கவரும் வகையில் உள்ளது. ரயில்வே உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ரயில் நிலையங்களை சர்வதேச தரத்தில் மேம்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம் கூட ரூ.735 கோடியில் மறு சீரமைக்கப்பட உள்ளது. நேற்று மத்திய நிதி அமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூட ரயில்வே துறைக்கு இதுவரை இல்லாத அளவாக ரூ.2.40 லட்சம் கோடி நிதியை ஒதுக்கீடு செய்தார்.
வந்தே மெட்ரோ ரயில்கள்
இருந்தாலும் பட்ஜெட்டில் வந்தே பாரத் ரயில் பற்றிய அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வந்தே பாரத் ரயில் பற்றிய அறிவிப்பு எதுவும் இடம் பெறவில்லை. இந்த நிலையில், 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக கூறியதாவது:-
நடப்பு ஆண்டு முடிந்து விடும்
வந்தே மெட்ரோ ரயில்களையும் உருவாக்கி வருகிறோம். பெரிய நகரங்களை சுற்றியுள்ள மக்கள் பல்வேறு தேவைகளுக்காக நகரங்களுக்கு அடிக்கடி வருகை தந்து விட்டு பின்னர் வீடு திரும்ப வேண்டியுள்ளது. இதன் காரணமாக தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலைப் போல வந்தே மெட்ரோ ரயில்களையும் கொண்டு வர இருக்கிறோம். இந்த வந்தே பாரத் ரயிலின் வடிவம் மற்றும் தயாரிப்பு பணி நடப்பு ஆண்டு முடிந்து விடும்.
தொலை தூர நகரங்களுக்கு இடையே
அடுத்த நிதியாண்டில் ரயில்களின் தயாரிப்பு பணி மேலும் துரிதப்படுத்தப்பட்டு பணிகள் முடிந்து விடும். இரண்டு இடங்களுக்கு இடையேயான துரிதமான பயண அனுபவத்தை இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் கொடுக்கும்" என்றார். வந்தே பாரத் ரயில் தொலை தூர நகரங்களுக்கு இயக்கபட்டு வரும் நிலையில், பெரு நகரங்கள் மற்றும் துணைக்கோள் நகரங்களுக்கு இடையேயான பயணத்திற்கு உகந்த வகையில் இந்த வந்தே மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
8 பெட்டிகள் கொண்டதாக
வந்தே பாரத் ரயிலில் 16 பெட்டிகள் உள்ளது. தற்போது முன்மொழியப்பட்டு இருக்கும் வந்தே மெட்ரோ ரயில்கள் 8 பெட்டிகள் கொண்டதாகவும் சொகுசு வசதிகள் கொண்டதாகவும் இருக்கும் என ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன. பெருநகரங்களுக்கு தினசரி வருகை தரும் வியாபாரிகள், மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வந்தே மெட்ரோ ரயில்கள் மூலம் அதிகம் பயன்பெறுவார்கள் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.