வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்.. ‘இந்த வாய்தானே அப்படி சொன்னது?’ கட்டம் கட்டும் எதிர்க்கட்சிகள்!
டெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் இந்த சரிவு ரூ.80ஆக இருந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது.
தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.82.33 ஆக சரிந்துள்ளது.
கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது இதுபோன்று இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தபோது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை வைத்து பாஜகவினர் மீம்ஸ் வெளியிட்டு கேலி செய்திருந்தனர். தற்போது அதே மீம்ஸை காங்கிரஸ் கட்சியினர் சுட்டிக்காட்டி பாஜகவை விமர்சித்துள்ளனர்.
ஐஏஎஸ் ஆபீசர்களாக RSS கும்பல்.. 'நாட்டை பிடித்த ஆக்டோபஸ்' பகீர் கிளப்பிய குமாரசாமி.. ஆமோதித்த திருமா!
வர்த்தக பற்றாக்குறை
இந்தியாவில் தொடர்ந்து வர்த்தக பற்றாக்குறை நீடித்து வரும் நிலையில் தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தைப் பொறுத்த அளவில் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை 26.72 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தகவல் வெளியிட்டிருந்தது. வர்த்தக பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசமாகும்.
ஏற்றுமதி சரிவு
இந்த வர்த்தக பற்றாக்குறை அதிகரிக்கும்போது இறக்குமதி அதிகரிக்கும். கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பரில் 56.29 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்த இறக்குமதி, 2022 செப்டம்பரில் 59.35 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ஏற்றுமதியை பொறுத்த அளவில், 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 33.81 பில்லியன் டாலராக இருந்தது. 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த ஏற்றுமதி 3.52 சதவிகிதமாக குறைந்து 32.62 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.
போர்
இந்திய ரூபாயின் சரிவுக்கு இது மிகப்பெரிய காரணம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மட்டுமல்லாது, ரஷ்யா-உக்ரைன் போரும் இந்த சரிவுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இந்த போர் காரணமாக கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு, முதலீடுகளை பல நாடுகள் டாலரில் மாற்றி வருவது போன்றவையும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணமாக சொல்லப்படுகிறது. மேலும், இந்தியாவில் இருந்த அந்திய முதலீடுகள் திடீரென திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒட்டுமொத்த காரணங்கள்
அதாவது அமெரிக்காவின் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்துவதாக அதிகரித்திருந்த நிலையில், அந்நிய முதலீட்டாளர்கள் பலரும் தங்களது முதலீட்டை அமெரிக்கா நோக்கி திருப்பியுள்ளனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் டாலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக, அந்நிய முதலீடு வெளியேற்றம், வர்த்தக பற்றாக்குறை, சர்வதேச அளவிலான பொருளாதார மந்தநிலை, போர் சூழல் என எல்லாமும் சேர்த்து அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தி இருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று சரிவு ஏற்பட்ட போது அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கார்டூன் வரைந்து பாஜவினர் கேலி செய்திருந்தனர். தற்போது அதே கார்ட்டூனை திரும்ப பதிவிட்டு காங்கிரஸ் கட்சியினர் விளக்கம் கேட்டு வருகின்றனர்.