கடுமையான லாக்டவுன் போட்டதால்தான்.. பொருளாதாரம் வேகமாக மீள முடிகிறது: தலைமை பொருளாதார ஆலோசகர்
டெல்லி: சரியான நேரத்தில், கடுமையான லாக் டவுன், இந்தியாவில் நடைமுறைக்கு வந்ததன் காரணமாக, உயிர்களை காப்பாற்றியதோடு, வேகமாக பொருளாதாரம் மீண்டு வருவதற்கும் அது உதவி செய்தது என்று நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
2021-22ம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன் பிறகு டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார் அரவிந்த் சுப்பிரமணியன்.
அப்போது அவர் கூறியதை பாருங்கள்: இந்த பொருளாதார ஆய்வறிக்கையை கொரோனாவுக்கு எதிராக போராடும் போராளிகளுக்கு சமர்ப்பிக்கிறோம். கொரோனா மற்றும் அதன் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாக பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து இருக்கலாம்.
ஆனால், பொருளாதாரம் மீண்டு விடும். உயிர் போனால் திரும்ப வராது. இந்தியா உரிய நேரத்தில் கடுமையான லாக்டவுனை நடைமுறைப்படுத்தியது. இதன் காரணமாக பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது. அது மட்டும் கிடையாது. பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதற்கு இது உதவி செய்துள்ளது.
ஒரு ரயில் பெட்டியில் 500 பேர் பயணிக்கிறார்கள் என்று வைப்போம். அதில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் 500 பேருக்கும் கொரோனா பரவும். ஆனால் அந்த 500 பேரும் வீட்டிலிருந்து வேலை பார்த்தால், அவர்களை கொரோனா சென்று சேர நாட்கள் பிடிக்கும். கொரோனா பாதிக்காமலும் போகலாம். இதுதான், இந்திய லாக்டவுன் சக்சஸ் மாடல்.
இந்தியாவில் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம்தான். ஆனால் முதியோர் எண்ணிக்கையும், அதிகமாகத்தான் இருக்கிறது. நமது நாட்டில் உள்ள முதியோரின் எண்ணிக்கை உலகின் பல்வேறு நாடுகளை விடவும் அதிகம். இது போன்ற ஒரு நாட்டில் லாக்டவுன் போன்ற கடும் நடவடிக்கைகள் உயிர்களை காப்பாற்ற அவசியப்படுகிறது.
லாக்டவுனை நடை முறைப்படுத்தா விட்டால் நிலைமை எப்படி இருந்திருக்கும் நடைமுறைப்படுத்தியதால் எப்படி இருக்கிறது என்று பல்வேறு ஆய்வுகளை நாங்கள் நடத்தியுள்ளோம். இதில் நமது லாக்டவுன் உயிர்களை காப்பாற்றியது மட்டுமில்லாமல், பொருளாதார வளர்ச்சிக்கும் உதவி செய்தது என்று சொல்லலாம். நாட்டிலேயே மகாராஷ்டிரா இந்த விஷயத்தில் சரியாக செயல்படாத மாநிலமாக இருக்கிறது. பரிசோதனை அடிப்படையில், உத்தரப் பிரதேசம், குஜராத், பீகார் ஆகிய மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். இவ்வாறு தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தெரிவித்தார்.