போலி சீன கடன் செயலிகள்.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் முக்கிய ஆலோசனை! வருகிறது நிரந்தர செக்?
டெல்லி: கடன் செயலிகளை தொடர்ந்து கண்காணித்து அதன் செயல்பாடுகளை முடக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் போலி கடன் செயலிகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. கடன் கொடுப்பதை போல கொடுத்துவிட்டு இந்த செயலிகள் கடன் பெற்றவரின் உயிரை காவு வாங்குவதாக தொடர் புகார்கள் வந்துள்ளன.
இந்நிலையில், இது குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் தள்ளப்பட்டன. தற்போது இது குறித்து மத்திய நிதியமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவு வாங்கும் கடன் செயலி
கடந்த சில நாட்களாக தமிழ்நாடு மட்டுமல்லாது பல மாநிலங்களில் தொடர் தற்கொலைகள் நிகழ்ந்து வந்தன. இதன் பின்னணியில் கடன் செயலிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதாவது, தேவையான பணத்தை உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கணக்கிற்கு பரிமாற்றிவிட்டடு குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாகவே கொடுக்கப்பட்ட தொகையை விட அதிக தொகையை கேட்டு தொந்தரவு செய்யப்பட்டிருந்ததே ஒவ்வொரு தற்கொலைக்கும் முக்கிய காரணம் என்று தெரிய வந்திருந்தது.

சீனாவின் சதி
அவ்வாறு கேட்ட தொகை கொடுக்கப்படவில்லையெனில், பணம் வாங்கிய நபரின் புகைப்படங்கள் மார்ப்பிங் செய்யப்பட்டு அவர்களது உறவினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் மனமுடைந்த பலர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர். இந்த பிரச்னை தீவிரமடைந்த நிலையில் இதற்கு எதிரான நடவடிக்கையை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தின. தொடர் கண்காணிப்பில், இந்த செயலிகள் சீனாவிலிருந்து இயக்கப்படுவதாக தெரியவந்தது.

ரெய்டு
இதனையடுத்து பெங்களூருவில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது. விசாரணையில் இந்தியர்களை போலியான இயக்குநர்களாக மாற்றி இந்த சீன கடன் செயலிகள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமலாக்கத்துறை அதிரடி ரெய்டில் இறங்கியது. முதற்கட்டமாக கடந்த 4ம் தேதி பெங்களூரில் பேடிஎம், ரேஸர்பே, கேஷ்ஃபிரீ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது.

கூட்டம்
தற்போது இதனைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறான சட்டவிரோத போலி கடன் செயலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கி அனுமதித்த கடன் செயலிகள் மட்டுமே கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளிட்ட ஆப் ஸ்டோர்களில் இடம் பெற அனுமதிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை மத்திய தொழிநுட்பத்துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதிரடி முடிவு
மேலும் இந்த ஆப்களை இயக்கும் பினாமிகளின் வங்கிக் கணக்கும் முடக்கப்படும். பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகம் இந்த செயலிகளுக்கு பின்னாள் இயங்கும் போலி நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்புடைய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்படு, அதன் மீதான நடவடிக்கைகளையும் நிதியமைச்சகம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications