அதி தீவிரமாகும் கொரோனா 2ஆம் அலை.. முக்கிய வீரர்கள் வரிசையாக விலகல்.. ஐபிஎல் தொடர்வதில் சிக்கல்?
டெல்லி; நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் டெல்லி அணியின் அஸ்வின், பெங்களூரு அணியின் ஆடம் ஜாம்பா என முக்கிய வீரர்கள் தொடர்ந்து விலகி வருவதால், ஐபிஎல் போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Recommended Video
ஐபிஎல் போட்டிகளுக்கு இந்தியா மட்டுமின்றி உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியபோதே, ஐபிஎல் தொடரை ரத்து செய்தால் அதனால் ஏற்படும் வருவாய் இழப்பு அதிகம் என்பதால் போட்டிகள் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டது.
நல்லா தின்னுதுங்க.. ஆனா முட்டைய காணோமே.. கோழிகள் பற்றி புகார்.. திணறிப் போன போலீஸ்!
அங்குப் பார்வையாளர்களின் அனுமதியின்றி போட்டிகள் நடத்தப்பட்டன. இருப்பினும், கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.
பிசிசிஐ திட்டவட்டம்
இதனால் ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்த முடிவு எடுக்கப்பட்டது, கொரோனா பரவல் மெல்லக் குறைந்துவிடும் என் நம்பிக்கையில்தான் பிசிசிஐ இந்த முடிவை எடுத்தது. இதன் காரணமாக தான், ஐபிஎல் தொடரின் பிற்பகுதியில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அப்போது பிசிசிஐ அறிவித்திருந்தது. வைரஸ் பாதிப்பு குறையும் என பிசிசிஐ அந்தளவுக்கு நம்பியது.
வீரர்களுக்கு வைரஸ் பாதிப்பு
ஆனால், ஐபிஎல் தொடர் நெருங்க நெருங்க இந்தியாவில் கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்தது. அவ்வளவு ஏன், ஐபிஎல் தொடங்குவதற்கு முன்னரே டெல்லி அணியின் அக்சர் பட்டெல், கொல்கத்தா அணியின் நிதிஷ் ரானா உள்ளிட்ட வீரர்களுக்கும் கொரோனா கண்டறியப்பட்டது. மேலும், வான்கடே மைதானத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும்கூட கொரோனா கண்டறியப்பட்டது. இதனால் திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறுமா என்பதில் சந்தேகம் ஏற்பட்டது.
சிறப்பு அட்டவணை
இருப்பினும், திட்டமிட்டபடி ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்தியே தீர வேண்டும் என்பதில் பிசிசிஐ உறுதியாக இருந்தது. முதல் போட்டி ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. கொரோனா பரவல் காரணமாக இந்த முறை நாட்டில் ஆறு மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்பட்டன. இதனால் எந்த அணிக்கும் ஹோம் அட்வான்டேஜ் கிடைக்காத வகையில் அட்டவணை தயார் செய்யப்பட்டது.
சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லை
சென்னை வெயிலை மிஞ்சும் அளவுக்கு முதல் போட்டி அமைந்து. இறுதி வரை பரபரப்பாகச் சென்ற அந்தப் போட்டியில் பெங்களூரு 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போது வரை லீக் சுற்றில் 20 போட்டிகள் முடிந்துள்ளது. ஒவ்வொரு போட்டியும் சுவாரசியத்துக்குப் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. நேற்றைய டெல்லி- ஹைதராபாத் போட்டிகூட சூப்பர் ஓவர் வரை சென்றது.
இரண்டாம் அலை
மைதானத்திற்குள் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறந்து கொண்டிருக்க, மையதானத்திற்கு வெளியே நாடே திண்டாடிக் கொண்டிருக்கிறது. கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் கோரத் தாண்டவத்தில் இந்தியாவே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. நாட்டின் பல்வேறு இடங்களிலும் ஆக்சிஜன் இல்லாமல் நோயாளிகள் சுற்றித் திரியும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் உயிரிழக்கும் கோரச் சம்பவங்களும் நடைபெறுகின்றன.
கில்கிறிஸ்ட் விமர்சனம்
ஆனால், இவை மைதானத்திற்குள் நடைபெறும் ஆக்ஷன்களை நிறுத்தவில்லை. இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கில்கிறி்ஸட் நேரடியாக விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், இந்தியாவில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனாலும்கூட ஐ.பி.எல் தொடர் நடைபெறுகிறது. இது பொருத்தமற்றது தானே? அல்லது மக்களை ஒவ்வொரு நாளும் திசைதிருப்பப் போட்டிகள் நடத்தப்படுகிறதா? எதுவாக இருந்தாலும் இந்தியர்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறேன்'' எனப் பதிவிட்டிருந்தார்.
முக்கிய வீரர்கள் விலகல்
அவர் விமர்சித்து ஒரு நாள்கூட முடியாத நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கு எதிராக அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் போராடி வரும் நிலையில் அவர்களுடன் ஆதரவாக இருக்க விரும்புவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார், இதேபோல பெங்களூரு அணியின் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன் ஆகிய வீரர்களும் கொரோனா காரணமாகத் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
பெரும் சிக்கல்
ஐபிஎல் போட்டிகளின் சிறப்பு அம்சமே இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த வீரர்கள் அனைவரும் விளையாடுவதுதான். ஆனால் கொரோனா பரவல் காரணமாக இப்படி முக்கிய வீரர்கள் ஒவ்வொருவரும் தொடரிலிருந்து வெளியேறி வருவதால், ஐபிஎல் தொடரையே முற்றிலுமாக தள்ளி வைக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அல்லது கடந்த ஆண்டைப் போலவே வேரொரு நாட்டில் தொடர் நடத்தவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் காரணமாக ஐக்கிய அமீரகம், இங்கிலாந்து உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் இந்தியப் பயணத்திற்குத் தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.