ஆர்எஸ்எஸ் ஈடுபாடு, எமர்ஜென்சி சிறைவாசம்..சமூக நீதி துறை அமைச்சரான மூத்த அரசியல்வாதி வீரேந்திர குமார்
டெல்லி: எமர்ஜென்சி காலத்தில் போராடி சிறை சென்றவரும் ஆறு முறை மக்களவை தேர்தலில் வென்றவருமான முனைவர் வீரேந்திர குமார் தற்போது சமூக நீதி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்ததில் இருந்து மத்திய அமைச்சரவை மாற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று மாலை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
மொத்தம் 43 பேர் புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தியாவிலேயே இளம் அமைச்சரவை என்று மோடியின் புதிய அமைச்சரவை அழைக்கப்படுகிறது.

அமைச்சரவையில் மாற்றம்
ஹர்ஷ் வர்தன் தொடங்கி பிரகாஷ் ஜவடேகர் வரை 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ராஜினாமா செய்திருந்தனர். முன்னதாக நேற்று எட்டு மாநில ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். மத்திய சமூக நீதித் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் கர்நாடகா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் புதிய அமைச்சராக முனைவர் வீரேந்திர குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மூத்த அரசியல்வாதி
மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியான வீரேந்திர குமார், இதுவரை ஆறு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர். 67 வயதான வீரேந்திர குமார், தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள வயதான நபர்களில் இவரும் ஒருவர். சர்வதேச விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் (ஐ.சி.டபிள்யூ.ஏ) உறுப்பினராகவும் உள்ளார்.

இடைக்கால சபாநாயகர்
2017 முதல் 2019ஆம் ஆண்டு வரை பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, சிறுபான்மை துறை இணை அமைச்சராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2019இல் பாஜக ஆட்சியைத் தக்க வைத்த போது, மக்களவையின் இடைக்கால சபாநாயகராகச் செயல்பட்டவர். அப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களுக்கு, இவர்தான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

எமர்ஜென்சி கைது
சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொண்ட இவர் ஆர்எஸ்எஸ் உறுப்பினராகவும் இருந்தார். மேலும், நாட்டில் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை எதிர்த்துப் போராடி சிறையும் சென்றுள்ளார். அப்போது சுமார் 16 மாதங்கள் அவர் சிறையில் இருந்துள்ளார். பொருளாதாரத்தில் எம்.ஏ படித்துள்ள வீரேந்திர குமார், குழந்தைத் தொழில் என்ற தலைப்பில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

சமூக நீதி துறை அமைச்சர்
1982ஆம் ஆண்டில் இவர் முறையாக அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். சாதிப் பாகுபாட்டை அகற்றும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். மேலும், நாட்டில் பல அனாதை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்களை இவர் நிறுவியுள்ளார். இப்படி அரசியலில் நீண்ட அனுபவம் கொண்ட இவருக்குத் தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் முறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications