காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டா? ஏற்கவே முடியாது.. பீட்டா பரபர வாதம்.. உச்சநீதிமன்றம் சுளீர் கேள்வி
டெல்லி: ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்ககோரிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‛‛பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்கவே முடியாது. ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் வதைக்கப்படுவதற்கான வீடியோ ஆதாரங்கள் உள்ளன. ஜல்லிக்கட்டு கலசார வேரை கொண்டிருக்கவில்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கி உள்ளது'' எனக்கூறி பீட்டா இன்று பரபரப்பான வாதத்தை முன்வைத்தது.
கடந்த 2011ல் காளைகள் காட்சி விலங்குகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் பொங்கல் சமயங்களில் பாரம்பரியமாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியது.
மிருக வதை தடுப்பு சட்டத்தையும், காட்சி விலங்குகள் பட்டியலில் காளை இருப்பதை சுட்டிக்காட்டிய நிலையில் உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்தது.

ஜல்லிக்கட்டு அவசர சட்டம்
இந்த தடைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக 2017 ல் சென்னை மெரினா கடற்கரையில் எந்த அரசியல் பின்புலமும் இன்றி பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதையடுத்து அப்போதைய அதிமுக அரசு ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசர சட்டத்தை இயற்றியது. இதையடுத்து ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது வரை நடத்தப்பட்டு வருகின்றன.

ஜல்லிக்கட்டு தடைகோரி வழக்கு
2023 ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் மீண்டும் பாரம்பரிய முறைப்படி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே தான் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு தடைக்கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. மேலும் கர்நாடகாவில் நடத்தப்பட்டு வரும் கம்பளா எனும் எருது விடும் போட்டிக்கு தடைகோரியும் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இந்த வழக்குகள் உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் நடந்து வருகிறது. தற்போது தினந்தோறும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு வழக்கு வந்தது. அப்போது பீட்டா சார்பில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்ககோரி வாதம் முன்வைக்கப்பட்டது.

கலாசார வேர் இல்லை
இந்த வேளையில் பீட்டா தரப்பில், ‛‛தமிழகத்தின் பாரம்பரிய காளை இனங்களை பாதுகாப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. பாரம்பரிய காளைகளை பாதுகாக்க ஜல்லிக்கட்டு பயன்படுகிறது என்ற வாதத்தை ஏற்க முடியாது. ஜல்லிக்கட்டு கலாசார வேரை கொண்டிருக்கவில்லை என உச்சநீதிமன்றமே தீர்ப்பு அளித்துள்ளது. மேலும் ஜல்லிக்கட்டுக்காக தமிழகம் சட்டம் இயற்றி இருப்பது உச்சநீதிமன்ற அதிகாரத்தில் தலையிடுவது போன்றதாக உள்ளது'' என வாதம் செய்யப்பட்டது.

சிசிடிவி ஆதாரம் இருக்கா?
மேலும் ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் வதைக்கப்படுவதற்கான வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன என பீட்டா தரப்பு வழக்கறிஞர் கூறினார். இந்த வேளையில் குறுக்கீடு செய்த நீதிபதிகள், ‛‛வீடியோ ஆதாரம் என்பது தங்களுக்கு எந்த பகுதி வேண்டுமோ அதை மட்டும் பதிவு செய்து கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் சிசிடிவியில் பதிவான ஆதாரம் என்பது அப்படியில்லை. அதில் அனைத்தும் பதிவாகும். உங்களிடம் சிசிடிவி பதிவு தொடர்பான வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் உள்ளதா?. அத்தகைய ஆதாரங்கள் இருந்தால் கொடுங்கள்'' என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.

முந்தைய விசாரணை
முன்னதாக கடந்த வாரத்தில் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நலவாரியங்கள் சார்பில் வழக்கறிஞர்கள் புகைப்படங்களை காட்டி வாதிடப்பட்டது. காளைகள் கட்டாயப்படுத்தப்பட்டு போட்டியில் பங்கேற்க செய்யப்படுகின்றன என கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், ‛‛நாட்டில் குதிரை பந்தயம் நடக்கிறது. இதில் குதிரை மகிழ்வுடன் பங்கேற்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?, கேரளாவில் யானைப் பந்தயம் நடத்தப்படுகிறது அது குறித்து என்ன சொல்லப் போகிறீர்கள்?'' என எதிர் கேள்வி கேட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications