வடக்கில் செழிப்பு.. தெற்கில் ஒன்னுமில்லை! வெற்றுப்பெருமை, ஏமாற்றம் நிறைந்த பட்ஜெட் -கமல்ஹாசன் காட்டம்
வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட் என மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்து உள்ளார்.
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கும் 2023 - 2024 நிதியாண்டிற்கான முழு பட்ஜெட் வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் என்று மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சாடி இருக்கிறார். வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட் இது என அவர் விமர்சித்து உள்ளார்.
மத்திய பாஜக அரசின் பதவி காலம் முடிய இன்னும் ஓராண்டே மீதம் இருக்கிறது. நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023 - 2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள சூழலில், இது மோடி 2.O அரசின் கடைசி முழு நீள பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட் மீது மக்களின் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஒரே மேடையில் முதல்வர் ஸ்டாலின், மல்லிகார்ஜூன கார்கே, கமல்ஹாசன் பிரசாரம்!
புதிய வரியில் சலுகை
கல்வி, சுகாதாரம், விவசாயம், வரி விகிதம், வேலை வாய்ப்பு தொடர்பாக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறுமா என்று மக்கள் எதிர்பார்த்தனர். குறிப்பாக மாத சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் வருமான வரியில் தங்களுக்கு சலுகை வழங்கப்படுமா என்று எதிர்பார்த்தனர். இந்த நிலையில் புதிய வரி திட்டத்தில் அவர் சலுகையை அறிவித்து இருக்கிறார்.
புதிய வருமான வரியில் சலுகை
புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.5 லட்சம் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட வருமான வரி விலக்கு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டது. அத்துடன் வருமான வரிக்கான உச்சவரம்பு என்பது ரூ.2.5 லட்சத்தில் இருந்து ரூ 3 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
கல்வி, சுகாதாரத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி
அதேபோல் அத்தியாவசிய துறைகளாக கருதப்படும் கல்வித்துறைக்கு ரூ.1,128 லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. அதேபோல் ரூ.88,956 கோடி நிதியை சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. ஆனால், இந்த தொகை மிகவும் குறைவு என்றும் பலர் விமர்சித்து வருகிறார்கள்.
விவசாயம்
அதேநேரம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு, பணவீக்கம் தொடர்பாகவும் புதிய பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கிறது. மேலும் விவசாயிகள் எதிர்பார்த்த கடன் தள்ளுபடி போன்ற திட்டங்களும் இதில் இடம்பெறவில்லை.
கமல்ஹாசன் கருத்து
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், "கோடிக்கணக்கான மக்கள் அன்றாட வாழ்வை நகர்த்த அல்லாடும் சூழலில் இந்தியப் பொருளாதாரம் பிரகாசிக்கிறது என்ற வெற்றுப் பெருமையுடன் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்த நேரடிப் பயன் தரும் திட்டங்கள் இல்லை.
மிடில் கிளாஸுக்கும் பயனில்லை
நடுத்தர வர்க்கத்திற்கான சில சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருவாய் இழப்பால் தவிக்கும் மிடில்க்ளாஸ் மக்களுக்கு இந்த வரிச்சலுகையால் பெரிய பலன் இருக்கப்போவதில்லை. கிராமப் பொருளியலை மேம்படுத்த, பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அறிவிப்புகள் ஏதும் இல்லை.
வடக்கிற்கு செழிப்பு.. தெற்கில் ஒன்னுமில்ல
சேமிப்பிற்குப் பதிலாக, செலவை ஊக்குவிக்கும் திட்டங்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உற்சாகமளிக்கும் அறிவிப்புகளும்தான் பட்ஜெட்டில் பளிச்சிடுகின்றன. வடக்கிற்குச் செழிப்பான, தமிழ்நாட்டிற்குப் பெரிய அறிவிப்புகளோ நிதி ஒதுக்கீடுகளோ இல்லாத, ஏமாற்றங்கள் மிகுந்த பட்ஜெட்தான் இது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.