திருப்பம்.. முந்திக்கொண்ட கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள்.. உச்சநீதிமன்றத்தில் சபாநாயகருக்கு செக்?
டெல்லி: கர்நாடக சட்டசபை, சபாநாயகர் ரமேஷ்குமார் தனது கடமையை சரியாக செய்யவில்லை, என்று கூறி, அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று திடீரென வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 10 எம்எல்ஏக்கள், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று திடீரென பெங்களூர் சிவாஜி நகர் தொகுதி எம்எல்ஏ ரோஷன் பெய்க், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் அவர் அதிருப்தியாளர்களுடன் ஹோட்டலில் தங்கவில்லை. பெங்களூரிலேயே உள்ளார்.
தேதி ஒதுக்கீடு
எம்எல்ஏக்கள் தனது செயலாளரிடம் வழங்கிவிட்டு சென்றிருந்த ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ரமேஷ்குமார் நேற்று பரிசீலனை செய்தார். அதில் பலரது ராஜினாமா கடிதங்களை சரியாக இல்லை என்றும், மேலும் நேரில் சந்தித்து அவர்களுடன் உரையாடினால் மட்டுமே ராஜினாமாவை ஏற்க முடியும் என்றும் கூறிய ரமேஷ்குமார், எம்எல்ஏக்களை சந்திப்பதற்கு ஒவ்வொரு தேதியாக ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார்.
வழக்கு
ராஜினாமா கடிதங்களை ஏற்காமல் சபாநாயகர் வேண்டுமென்றே தாமதித்து ஆட்சியை நீடிக்க வைக்க முயற்சி செய்கிறார் என்று அதிருப்தி எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதே விஷயத்தை முன்வைத்து உச்சநீதிமன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று வழக்கு தொடர்ந்துள்ளனர். சபாநாயகர் சரியாக கடமையாற்றவில்லை என்றும், தங்களது ராஜினாமா கடிதங்களை உடனடியாக ஏற்கும்படி உத்தரவிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளை விசாரணை
அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி ஆஜராகியுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதற்கு காங்கிரஸ் சார்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களுக்கு, நேர்ந்த கதி தங்களுக்கும் நடந்து விடக்கூடாது என்பதற்காக, அதிருப்தியாளர்கள் முன்கூட்டியே நீதிமன்றத்தை அணுகி விட்டனர் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
கேள்விக் கணைகள்
ஆனால், ஏன் இவ்வளவு அவசரமாக ராஜினாமாவை ஏற்கச் சொல்கிறீர்கள், உங்கள் நோக்கம் அரசை கலைப்பதுதானா, அப்படியானால் உங்கள் பின்னணியில் யார் இருக்கிறார்கள், உங்களை தகுதி நீக்கம் செய்யலாம்தானே, என்ற கேள்வியை சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் முன்வைக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.