கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொடூர படுகொலை- தொடரும் மாணவர் போராட்டம்- மருந்து கொள்ளை பின்னணியா?
டெல்லி: கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் அரசு மருத்துவக் கல்லூரியின் மருந்து கொள்ளை உள்ளிட்ட முறைகேடுகள் இருக்கலாம் என்கிற சந்தேகத்தை போராடும் மாணவர்கள் எழுப்பி உள்ளனர். கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் படுகொலை தொடர்பாக ஆர்ஜி கர் அமருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் சந்த் கோஷிடம் இன்றும் 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி கோரி கொல்கத்தா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தேசத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவால் தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. பயிற்சி மருத்துவரை பலாத்காரம் செய்து படுகொலை செய்ததாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். ஆனாலும் பயிற்சி மருத்துவரின் இந்த கொடூரப் படுகொலையின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் மருத்துவ மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரியின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷிடம் இன்று 3-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். பயிற்சி மருத்துவர் படுகொலையை மூடி மறைத்து தற்கொலை என மாற்ற முயற்சித்தவர்தான் சந்தீப் கோஷ். மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் சந்தீப் கோஷ். 2023-ம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகிய நிலையில் முர்ஷிதாபாத் மருத்துவ கல்லூரிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் இந்த இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டு போராட்டம் நடத்தினார் சந்தீப் கோஷ். இதனால் இடமாறுதல் உத்தரவும் ரத்தானது. தேசிய மருத்துவக் கல்லூரியில் துணை முதல்வராக இருந்த நிலையில் ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி முதல்வராக்கப்பட்டார் சந்தீப் கோஷ். இந்த ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் மருந்துகள் கொள்ளை உள்ளிட்ட ஏராளமான முறைகேடுகள் நடந்ததாகவும் இதனை பகிரங்கப்படுத்த பயிற்சி மருத்துவ முயன்றதால் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்கின்றனர் மருத்துவ மாணவர்கள். இதனால் சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்தி வரும் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே தங்களுக்கு உரிய நீதி கோரி கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பல நகரங்களில் மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications