Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மிஸ்ஸே ஆகாது.. கொல்கத்தா டாக்டர் கொலையில் சிபிஐ இறக்கிய 2 பெண் சிங்கங்கள்.. யார் இந்த மீனா + சீமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொல்கத்தா பெண் பயிற்சி டாக்டர் பலாத்கார கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாட்டையே இந்த சம்பவம் உலுக்கி உள்ளதால் சிபிஐ முக்கிய 2 பெண் சிங்கங்களை விசாரணை அதிகாரிகளாக களமிறக்கி உள்ளது. இதனால் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் தப்ப வாய்ப்பில்லை என கூறப்படும் நிலையில் அந்த பெண் அதிகாரிகள் யார்? அவர்களை ஏன் இந்த வழக்கில் சிபிஐ நியமனம் செய்துள்ளது? என்பது பற்றி இங்கு பார்ப்போம்.

கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய பயிற்சி டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 9 ம் தேதி நடந்தது. அவரது உடல் மருத்துவமனையில் உள்ள செமினார் ஹாலில் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்தன.

Kolkata Kolkata Doctor Case CBI

இந்த சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கி உள்ளது. பெண் டாக்டர் கொலையை கண்டித்தும், மருத்துவ பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் கடந்த 17 ம் தேதி நாடு முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே தான் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை முதலில் கொல்கத்தா போலீசார் விசாரணை நடத்தி சஞ்சய் ராய் என்பவரை கைது செய்தனர்.

அதன்பிறகு வழக்கு விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது. தற்போது சிபிஐ விசாரணையை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக கைதான சஞ்சய் ராயை காவலில் எடுத்து சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மொத்தம் 25 பேர் அடங்கிய விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

சம்பத் மீனா: இந்த விசாரணை குழுவின் தலைவராக இருப்பவர் சம்பத் மீனா. இவர் சிபிஐயில் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ மண்டல கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருகிறார். ராஜஸ்தான் மாநிலம் சவாய்மாதோபூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவர் பெண்கள் பிரச்சனைகள், மனித உரிமை பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். கடந்த 1994ம் ஆண்டு ஐபிஎஸ் ஆகி ஜார்கண்ட் கேடரில் பணியாற்றினார்.

இவரது தந்தை ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி. அவரது கணவர் சுரேந்திர சிங் 1993ம் ஆண்டு ஜார்கண்ட் கேடரின் ஐஏஎஸ் அதிகாரி. சம்பத் மீனா ஜார்கண்டில் இருந்து 5 ஆண்டு டெபுடேசனாக மத்திய அரசு பணிக்கு சென்றார். அதன்பிறகு 2 ஆண்டு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதாவது 2017ல் சிபிஐயில் இணைந்த சம்பத் மீனா அடுத்த மாதம் வரை மத்திய அரசு பணியில் இருப்பார். இந்நிலையில் தான் தற்போது சம்பத் மீனா வசம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த 2017ம் ஆண்டில் நாட்டையே உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் பாலியல் பலாத்கார சம்பவம் உலுக்கியது. 19 வயது தலித் பெண்ணை உயர்ஜாதியை சேர்ந்த 4 பேர் கூட்டு பலாத்காரம் செய்தனர். இந்த வழக்கை விசாரித்தது சம்பத் மீனா தான். அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை இவர் தலைமையிலான டீம் தான் விசாரணை நடத்தியது.

அதன்பிறகு 2020ல் நாட்டை உலுக்கிய ஹத்ராஸ் பலாத்கார கொலை வழக்கும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கில் 17 வயது தலித் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் பாஜகவை சேர்ந்த குல்தீப் சிங்கிற்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. இப்படி நாட்டையை உலுக்கிய உன்னாவ், ஹத்ராஸ் வழக்குகளில் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தியதால் கொல்கத்தா வழக்கை விசாரிக்கும் பொறுப்பு சம்பத் மீனாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீமா பகுஜா: அதேபோல் சம்பத் மீனாவின் இந்த விசாரணை குழுவில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு அதிகாரியின் பெயர் சீமா பகுஜா. இவர் தான் களத்தில் எல்லா விசாரணைகளையும் நேரடியாக மேற்கொள்பவர். சிபிஐயில் ஏஎஸ்பி எனும் கூடுதல் எஸ்பி அந்தஸ்தில் பதவி வகிக்கிறார். இவர் டெல்லியில் 1993ம் ஆண்டில் சப் -இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். அதன்பிறகு அவர் சிபிஐயில் ஊழல் ஒழிப்பு படையில் பயிற்சி பெற்றார். அதன்பிறகு சிபிஐயின் சிறப்பு குற்றப்பிரிவின் இன்ஸ்பெக்டராக 1998 ல் பதவி உயர்வு பெற்றார். 2013ம் ஆண்டில் டிஎஸ்பியான நிலையில் தற்போது கூடுதல் எஸ்பியாக செயல்பட்டு வருகிறார். புலனாய்வில் மிகவும் திறமையாக செயல்படக்கூடியவர்.

இவர் தனது சிறப்பான புலனாய்வு பணிக்காக கடந்த 2007 முதல் 2018 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 2 தங்கப்பதக்கங்களை பெற்றார். ஹத்ராஸ் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கை விசாரித்த டீமில் சீமா பகுஜாவும் முக்கியமானவர். 2007 முதல் 2018 வரை சிபிஐயில் சிறப்பான விசாரணை நடத்தியதற்காக 2 முறை தங்க பதக்கம் பெற்றார். ஒரு முறை குடும்ப சூழல்நிலை காரணமாக விருப்ப ஓய்வு பெற முயன்றார். ஆனால் அப்போதைய சிபிஐ இயக்குனர் அவரை விடவில்லை. வேலையை தொடரும்படி கேட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு அவரது பணி சிபிஐக்கு தேவைப்படுகிறது.

குறிப்பாக இமாச்சல் வழக்கு ஒன்றில் சீமா பகுஜாவின் புலனாய்வு திறமை வெகுவாக பாராட்டப்பட்டது. 2017ம் ஆண்டு இமாச்சல் மாநிலம் சிம்லாவில் உள்ள கோத்காய் காட்டு பகுதியில் 16 வயதான பள்ளி மாணவி இறந்து கிடந்தார். அவரை ஒருவர் தூக்கி சென்று பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இந்த வழக்கில் இமாச்சல் போலீசார் துப்பு துலங்க திணறிய நிலையில் சிபிஐ வசம் வழக்கு போனது. இதில் சீமா பகுஜா விசாரணை நடத்தி துப்பு துலக்கினார். மரம் வெட்டும் தொழிலாளியான அனில் குமாரை குற்றவாளி எனக்கூறி நீதிமன்றத்தில் நிறுத்தி அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தார். இந்த வழக்கில் அந்த நபருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது.

இதனால் தற்போது நாட்டையை உலுக்கி உள்ள கொல்கத்தா பெண் டாக்டர் பலாத்கார கொலை வழக்கில் சிபிஐ சம்பத் மீனா மற்றும் சீமா பகுஜாவை முக்கிய அதிகாரிகளாக களமிறக்கி உள்ளது. இதனால் இந்த வழக்கிலும் விரைவில் உண்மை வெளிவரும். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உறுதியாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்கிறது சிபிஐ வட்டாரம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+