அடேங்கப்பா! உலகிலேயே இந்தியாவில் தான் கேஸ் விலை காஸ்ட்லி.. பெட்ரோல், டீசல் எங்கே அதிகம் தெரியுமா
டெல்லி: உலக அளவில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை இந்தியாவில் அதிகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு நவ. 4ஆம் தேதி தீபாவளி அன்று பெட்ரோல் , டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. அதன் பின்னர் பல வாரங்களுக்கு பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் விற்பனை ஆனது.
உக்ரைன் போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பல மடங்கு அதிகரித்த போதிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமில்லாமல் விற்பனையானது. இதற்கு 5 மாநில தேர்தல் முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டது.

இந்தியா
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மளமளவென உயர்ந்து வருகிறது. அதேபோல கேஸ் சிலிண்டர்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. உலகிலேயே கேஸ் சிலிண்டர்களின் விலையை எடுத்துக் கொண்டால் அது இந்தியாவில் தான் மிக அதிகமாக உள்ளது. அதேபோல பெட்ரோல் விலையை எடுத்துக் கொண்டால் மூன்றாவது இடத்திலும் டீசல் விலையை எடுத்துக் கொண்டால் அது உலகின் எட்டாவது இடத்திலும் உள்ளது

மாறுபடும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்றமே பெரும்பாலும் எரிபொருள் விலை உயர்வுக்குக் காரணமாகச் சொல்லப்படும். உலகின் பெரும்பாலான நாடுகளிலும் எரிபொருள் விலை அதிகரிக்கும் போதிலும், இந்தியாவில் அதன் தாக்கம் ஏன் அதிகமாக உள்ளது. ஏனென்றால் சர்வதேச சந்தையில் விலைகளை ஒப்பிடும் போது, ஒவ்வொரு நாட்டில் வசிக்கும் மக்களும் வெவ்வேறு வாங்கும் சக்திகளைக் கொண்டிருப்பார்கள். அதேபோல ஒவ்வொரு நாட்டிலும் வருமானத்தின் அளவும் மாறுபடும்.

மேற்கத்திய நாடுகள்
மேற்கத்திய நாடுகளைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒரு லிட்டர் பெட்ரோல் என்பது சராசரி மக்களின் தினசரி வருவாயில் ஒரு பகுதியாகவே இருக்கும். ஆனால் இந்தியாவைப் பொருத்தவரை பெட்ரோல் விலை என்பது இந்தியரின் தினசரி வருமானத்தில் நான்கில் ஒரு பங்காக உள்ளது . அதேபோல புருண்டி போல சில ஆப்பிரிக்க நாடுகளில் சராசரி மக்களின் தினசரி வருமானத்தை விட பெட்ரோல் விலை அதிகமாக உள்ளது. இது பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாட்டில் உள்ள மக்களை எந்தளவு பாதிக்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

அமெரிக்கா
நாட்டில் இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.120ஆக உள்ளது. இதை டாலருக்கு மாற்றும்போது $1.58 டாலராக இருக்கும். அமெரிக்காவில் ஒரு டாலரை கொண்டு உண்மையில் இந்தியாவில் வாங்கக்கூடிய பொருட்களை விட குறைவாக வாங்க முடியும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் சராசரி விலை $1.94 ஆக இருந்தது. இது இந்திய மதிப்பில் ரூ. 147ஆகும். இந்தத் தொகையைக் கொண்டு இந்தியாவில் 7 கிலோவுக்கு மேல் உருளைக்கிழங்கை வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை
இதனால் உள்ளூர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலையை அப்படியே ஒப்பீடு செய்வது தவறாக இருக்கும். இதன் காரணமாக வல்லுநர்கள் PPP என்ற முறையில் சர்வதேச டாலரைக் கொண்டு பெட்ரோல், டீசல் விலையைக் கணக்கிடுகின்றனர். இந்த முறையின்படி இந்தியாவில் பெட்ரோல் விலை 5.2 சர்வதேச டாலர் என கணக்கிடப்படுகிறது. அதாவது சூடான் (8 சர்வதேச டாலர்), லாவோஸ் (5.6 சர்வதேச டாலர்) நாடுகளுக்குப் பின் இந்தியாவில் தான் பெட்ரோல் காஸ்ட்லியாக உள்ளது. ஒப்பீட்டிற்குச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவில் 1.2 சர்வதேச டாலர், ஜப்பானில் 1.5 சர்வதேச டாலருக்கு பெட்ரோல் விற்கப்படுகிறது.

டீசல் விலை
டீசலை பொருத்தவரை இந்தியாவில் அதன் விலை 4.6 சர்வதேச டாலராக உள்ளது. அதிகபட்சமாக சூடானில் 7.7 சர்வதேச டாலருக்கு டீசல் விற்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அல்பேனியா, துருக்கி, மியான்மர், ஜார்ஜியா, பூட்டான் மற்றும் லாவோஸ் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. சர்வதேச அளவில் இந்தப் பட்டியலில் இந்தியா 8ஆவது இடத்தில் உள்ளது.

எல்பிஜி கேஸ்
அதேநேரம் எல்பிஜி கேஸை பொருத்தவரை இந்தியா அதில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் எல்பிஜி கேஸ் லிட்டருக்கு 3.5 டாலர் என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்து துருக்கி, பிஜி, மால்டோவா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளில் அதிகமாக உள்ளது.

தினசரி வருவாய்
தினசரி வருவாயை வைத்துக் கணக்கிடும் போது, அமெரிக்கரின் தினசரி வருமானத்தில் பெட்ரோல் விலை 0.6%ஆக உள்ளது. ஸ்பெயினில் இது ஒரு சராசரி நபரின் தினசரி வருமானத்தில் 2.2% வரை உள்ளது. அதேநேரம் இந்தியாவில் பெட்ரோல் விலை ஒரு சராசரி நபரின் தினசரி வருமானத்தில் 23.5% ஆகவும் பாகிஸ்தானில் இது 23.8%ஆகவும் நேபாளத்தில் இது 38.2% ஆகவும் புருண்டியில் இது 181.8% ஆகவும் ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications