எழுந்த எதிர்ப்பு.. மன்னிப்பு கேட்ட மதன் கவுரி! பிபிசி ஆவணப்படம் குறித்த வீடியோ நீக்கம்
குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம் தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் யூடியூபர் மதன் கவுரி அந்த வீடியோவை நீக்குவதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
டெல்லி: கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தின் பின்னணியில் அப்போது முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் தலையீடு இருந்ததாக கூறி மோடி குவெஸ்டீன் என்ற பெயரில் முன்னணி ஊடகமான பிபிசி 2 பாகங்களாக வெளியிட்டுள்ள ஆவணப் படத்திற்கு மத்திய அரசு தடை விதித்து இருக்கும் நிலையில், அது தொடர்பாக வீடியோ வெளியிட்டு இருக்கும் யூடியூபர் மதன் கவுரிக்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த வீடியோவை நீக்குவதாக கூறி மன்னிப்பு கேட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக நரேந்திர மோடி பதவி வகித்தபோது கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி ரயில், கோத்ரா பகுதியில் தீப்பிடித்து எரிந்தது.
59 இந்து யாத்திரிகர்கள் அதில் உயிரிழந்தார்கள்.
பிபிசி ஆவணப்படம் பார்த்த மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது.. வேல்முருகன் ஆவேசம்!
வெடித்த மதக் கலவரம்
ஆனால், இந்த சம்பவத்திற்கு இஸ்லாமியர்கள் காரணம் என்று கூறி குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்பினர் ரயில் எரிந்த அதே நாளில் தாக்குதல்களை தொடங்கினர். வன்முறையில் 20,000 இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள், 360 மசூதிகள் தாக்கி அழிக்கப்பட்டன.
பில்கிஸ் பானு
இந்த கலவரத்தால் 1.5 லட்சம் மக்கள் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர். தொடர்ந்து கலவரம் நடைபெற்ற நிலையில் தஹோத் மாவட்டத்தில் உள்ள ரந்திக்புர் கிராமத்தில் மார்ச் 3 ஆம் தேதி கலவரம் வெடித்தது. அப்போது 30 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பில்கிஸ் பானு மற்றும் அவரது சிறுவயது மகள் மற்றும் பிற 15 குடும்ப உறுப்பினர்களைத் தாக்கியது. இதில் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
குற்றவாளிகள் விடுதலை
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள் கடந்த ஆண்டு மாநில அரசின் பரிந்துரையுடன் விடுவிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோல், அஹமதாபாத்தின் சமன்புராவில் உள்ள குல்பெர்க் சொசைட்டியில் காங்கிரஸ் எம்.பியாக இருந்த இஹ்சான் ஜாஃப்ரி உட்பட 35 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உயிருடன் தீ வைத்து எரிக்கப்பட்டனர். இந்த கொடூர நிகழ்வில் மட்டும் 69 பேர் கொல்லப்பட்டனர்.
நரேந்திர மோடிக்கு எதிராக வழக்கு
இதில் பாஜகவை சேர்ந்த பிபிப் படேல் உட்பட 12 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த கலவரம் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நரேந்திர மோடி, போலீஸ் உயரதிகாரிகள் உட்பட 59 பேர் எந்த குற்றமும் செய்யவில்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
ஜக்கியா ஜாஃப்ரி வழக்கு
இதனை மறு ஆய்வு செய்யக்கோரி கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் மனைவி ஜக்கியா ஜாஃப்ரி தொடர்ந்த வழக்கு அஹமதாபாத் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை எதிர்த்து ஜக்கியா ஜாஃப்ரியின் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
பிபிசி ஆவணப்படம்
இந்த நிலையில் பிரபல ஆங்கில தொலைக்காட்சியான பிபிசி, மோடி குவெஸ்டீன் என்ற பெயரில் குஜராத் கலவரத்தின் பிரதமர் மோடியின் பங்கு இருப்பதாக கூறி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது. இதற்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், அதை எதிர்த்து பல கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் ஆவணப்படத்தை பார்க்கும் போராட்டங்களை மாணவர் அமைப்புகள் நடத்தின.
மதன் கவுரி வீடியோ
இந்த நிலையில் பிரபல யூடியூபர் மதன் கவுரி "மோடி அரெஸ்ட் பிபிசி" என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், பிபிசி ஆவணப்படத்தை தான் பார்க்கவில்லை என்றும், ஆனால் குஜராத் மதக் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டு இருந்தாலும் உள்நாட்டு விவகாரத்தில் பிறர் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று பேசி இருந்தார்.
மீம்கள்
இதனிடையே ரஷியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, சிரியா, வட கொரியா என பல நாடுகளை பற்றி பேசிய வீடியோ வெளியிட்ட மதன் கவுரி இதை பற்றி பேசலாமா பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்து இருந்தனர். ஏராளமானோர் மீம்களையும் வெளியிட்டு வந்தனர். விக்கிபீடியாவில் படித்துவிட்டு அப்படியே பேசி வருகிறார் என்று குற்றம்சாட்டிய நெட்டிசன்கள் அவரது யூடியூப் சேனலை அன்-சப்ஸ்கிரைப் செய்வதாக அறிவித்தனர்.
மன்னிப்பு கேட்ட மதன்
இந்த நிலையில் இன்று ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் மதன் கவுரி, "நான் வெளியிட்ட ஒரு வீடியோ எனது பல ஃபாலோயர்களை காயப்படுத்தி இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன். உங்களின் கருத்துக்களை நான் படித்தேன். உங்களை காயப்படுத்தியதற்கு தனிப்பட்ட முறையில் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த வீடியோவை நீக்கிவிட்டேன். இனி எதிர்காலத்தில் கவனமாக இருப்பேன். அனைவருக்கும் என் அன்பு." என்று கூறி இருக்கிறார்.