2 வாளுடன் கேடயம்.. மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவுக்கு புதிய சின்னம்..தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு
டெல்லி: மஹாராஷ்டிராவில் செயல்பட்டு வரும் சிவசேனா 2 அணியாக பிரிந்த நிலையில் வில் அம்பு சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு 2 வாளுடன் கூடிய கேடயம் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்தினர். சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக செயல்பட்டு வந்தார்.
2019 முதல் இரண்டரை ஆண்டுகள் வரை இந்த கூட்டணி ஆட்சி நடந்தது. இந்நிலையில் சமீபத்தில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது.
சிவசேனா சின்னம்: உடனே கொடுங்க.. தேர்தல் ஆணையத்திற்கு ஏக்நாத் திடீர் கடிதம்.. உத்தவ் திட்டம் என்ன?
முடிவுக்கு வந்த கூட்டணி ஆட்சி
சிவசேனா கட்சியை சேர்ந்த 35க்கும் அதிகமான எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக பிரிந்தனர். இவர்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு கொடுத்த ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்த நிலையில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர்.
முதல்வரான ஏக்நாத் ஷிண்டே
இதையடுத்து மஹாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஏக்நாத் ஷிண்டே முதல்வராக உள்ளார். இதை தொடர்ந்து உண்மையான சிவசேனா யார் என்பதில் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தரப்பு இடையே பிரச்சனை எழுந்தது. இதுதொடர்பாக இருதரப்புக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
வில் அம்பு சின்னம் முடக்கம்
இந்த பிரச்சனை தேர்தல் ஆணையம் சென்ற நிலையில் சிவசேனாவின் தேர்தல் சின்னமான 'வில் மற்றும் அம்பு' சின்னம் முடக்கப்பட்டது. இதற்கிடையே தான் அந்தேரி கிழக்கு தொகுதியில் நவம்பர் மாதம் 3ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் தரப்பில் இருந்து வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதனால் இந்த தேர்தலில் வேட்பாளர்கள் போட்டியிடும் வகையில் சின்னம் ஒதுக்கீடு செய்ய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்தனர்.
தீபச்சுடர் சின்னம் ஒதுக்கீடு
உத்தவ் தாக்கரே அணி தரப்பில் திரிசூலம், உதயசூரியன் சின்னங்கள் கோரப்பட்டு இருந்தது. இதில் திரிசூலம் மத அடையாளமாக உள்ளதால் தேர்தல் ஆணையம் நிராகரித்தது. உதயசூரியன் திமுகவின் சின்னம் என்ற நிலையில் இதில் உத்தவ் தாக்கரே அணிக்கு 'தீபச்சுடர்'சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அணி 'சிவசேனா உத்தவ் பாலசாஹேப் தாக்கரே' என்ற பெயரில் தீபச்சுடர் சின்னத்தில் செயல்பட உள்ளது.
இருவாளுடன் கேடயம் சின்னம்
அதேபோல் ஏக்நாத் ஷிண்டே அணி 'பாலசாஹேபாஞ்சீ சிவசேனா' என்ற பெயரில் செயல்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி இவர்கள் சூரியன், கேடயம், வாள், உள்ளிட்டவற்றில் ஒன்றை ஒதுக்க இன்று கோரியிருந்தனர். இதனை பரிசீலித்த தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சிக்கு இரு வாளுடன் கூடிய கேடயம் சின்னத்தை ஒதுக்கியுள்ளது.