ஹிஜாப் விவகாரம் உள்நாட்டு பிரச்சினை.. வெளிநாடுகள் கருத்து கூற வேண்டாம்.. மத்திய அரசு திட்டவட்டம்
டெல்லி: ஹிஜாப் விவகாரம் என்பது எங்களுடைய உள்நாட்டு பிரச்சினை என்பதால் இதில் வெளிநாடுகள் கருத்துகளை கூற வேண்டாம் என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
கர்நாடகாவில் தலையில் ஸ்கார்ஃப் போல் பயன்படுத்தப்படும் ஹிஜாப்பை அணிய தடை விதிக்கப்பட்டது. முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என இந்துத்துவா மாணவர்கள் பிரச்சினையை கிளப்புவதால் இது மேலும் பூதாகரமாகியுள்ளது.
ஹிஜாப்பிற்கான தடையை எதிர்த்து பியூ கல்லூரிகளில் மாணவிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் அந்த மாநிலத்தில் உயர்நிலை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கர்நாடகா உயர்நீதிமன்றம்
ஹிஜாப் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு குறித்து வரும் திங்கள்கிழமை விசாரணை நடத்தி முடிவு செய்யப்படுகிறது. அதுவரை ஹிஜாப், காவி உடை எதையும் கல்வி நிறுவனங்களுக்கு அணிய கூடாது என ஹைகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து கர்நாடகாவில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மற்றும் கல்லூரிகளுக்கு வரும் 16 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டியா மாணவி
இந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் அல்லா ஹூ அக்பர் என்ற மண்டியா மாணவி முஸ்கானுக்கு பாகிஸ்தானிலிருந்து ஆதரவு குரல் எழுந்துள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ், ஹிஜாப் அணிந்த மாணவி முஸ்கானின் படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் புரொஃபைல் படமாக வைத்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் ஆளும் கட்சி
அது போல் பாகிஸ்தானின் ஆளும் கட்சியான பிடிஐயும் மாணவி முஸ்கானின் முழக்கம் குறித்த வீடியோவை வெளியிட்டு துணிச்சலுக்கு உதாரணம்! அல்லா ஹூ அக்பர். மோடியின் ஆட்சியில் இந்தியாவில் அழிவுமட்டுமே உள்ளது. ஜின்னா சொன்னது சரிதான் என கூறியுள்ளது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தில் வெளிநாட்டுகள் கருத்து சொல்ல வேண்டாம் என ட்விட்டரில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது.
இந்தியா எதிர்ப்பு
இதுகுறித்து வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டரில் கூறுகையில் ஹிஜாப் விவகாரம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இது எங்களுடைய உள்நாட்டு விவகாரம். இதில் வெளிநாடுகள் கூறும் கருத்துகள் ஏற்கப்படாது. இந்த பிரச்சினையை தீர்க்க நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்திய அரசியலமைப்பு, ஜனநாயக நெறிமுறைகளின்படி ஹிஜாப் பிரச்சினையை தீர்த்துக் கொள்வோம் என தெரிவித்துள்ளார்.