கொரோனா பாதிப்பில் இந்தியா ஃபர்ஸ்ட்.. மோடி அவசர ஆலோசனை.. மீண்டும் லாக்டவுனை கையில் எடுக்க முடிவு?
டெல்லி: கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், தடுப்பூசி போடும் பணி தொடர்பாகவும் ஆலோசனை செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
உச்சத்தில் கொரோனா
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.உலகளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. கொரோனா தொடர்ந்து ஆதிக்கம் செய்த அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் தினசரி பாதிப்பை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 90,00-ஐ கடந்துள்ளது. தினசரி உயிரிழப்பும் 700-ஐ கடந்து செல்கிறது.
மகாராஷ்டிராவில் கட்டுக்கடங்காத பாதிப்பு
மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர், டெல்லி, தமிழ்நாடு, உத்தரபிரதேசம், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 81.42% உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிப்பு கட்டுக்கடங்காமல் செல்கிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 49,447 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மக்கள் மெத்தனமே காரணம்
கொரோனாவை விரட்டியடிக்க கடந்த ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தி வரும் நிலையிலும், தொற்று பாதிப்பு உச்சத்தில் உள்ளது பொதுமக்களிடம் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. மக்கள் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை கைவிட்டதே பாதிப்பு இந்தளவுக்கு சென்றதுக்கு காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.
மோடி அவசர ஆலோசனை
கொரோனா டாப் கியரில் பயணித்து வருவதால் மீண்டும் லாக்டவுன் வந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் மூழ்கியுள்ளனர். கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்டக் குழு கூட்டம் நடந்தது.அமைச்சரவை செயலாளர், பிரதமரின் முதன்மை செயலாளர், சுகாதார செயலாளர் உட்பட அனைத்து மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
மீண்டும் லாக்டவுனா?
கொரோனாவை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும், இனிமேல் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் கூட்டதில் ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் தடுப்பூசி போடும் பணி தொடர்பாகவும் ஆலோசனை செய்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறின. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு மீண்டும் பல கட்டுப்பாட்டுகளை கையில் எடுக்கும் என்று தெரிகிறது.