அமலாக்கத்துறைக்கு சூப்பர் பவர்.. இனி ஜிஎஸ்டி முறைகேடு வழக்கையும் விசாரிக்கும்.. மத்திய அரசு அதிரடி!
டெல்லி: ஜிஎஸ்டி மோசடி தொடர்பான வழக்குகளை இனி அமலாக்கத்துறை விசாரிக்கும் வகையில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. ஜிஎஸ்டியின் முழு அமைப்பை பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது மத்திய அரசு.
சட்டவிராத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவு பிரிவு ஆகியவற்றுடன் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டிய நிறுவனங்களின் பட்டியலில் தற்போது ஜிஎஸ்டி நெட்வொர்க்கை மத்திய அரசு இணைத்துள்ளது.

ஜிஎஸ்டி நெட்வொர்க் அரசியலமைப்புச் சட்டத்தின் 66வது பிரிவில் உள்ள பட்டியலில் 26வது அமைப்பாகச் சேர்க்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதன் மூலம் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு ஆகிய விசாரணை அமைப்புகளின் விசாரணைக்கு தகவல் தேவைப்பட்டால், ஜிஎஸ்டி நெட்வொர்க் அந்தத் தகவல்களை அவர்களிடம் அளிக்க வேண்டும்.
ஜிஎஸ்டி தாக்கல் செய்பவர் ஏதேனும் சந்தேகத்திற்குரிய அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால், அவர் பற்றிய தகவல்களை ஜிஎஸ்டி நெட்வொர்க் அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவுடன் பகிர்ந்துகொள்ளும். இதன்மூலம், அமலாக்கத்துறை மற்றும் பொருளாதார நுண்ணறிவுப் பிரிவு போன்ற புலனாய்வு அமைப்புகளுக்கு ஜிஎஸ்டி குறித்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க அதிகாரம் உண்டு.
இந்தியாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி அடையாள எண்களை அதிகாரிகள் பரிசோதித்ததில் அவற்றில் 25% போலியானது என்று அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து போலியான ஜிஎஸ்டி பதிவு தொடர்பான வழக்கில் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த நிலையில், தற்போது அமலாக்கத்துறைக்கு இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை வெளியிட்டுள்ளது. பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜிஎஸ்டியின் முழு அமைப்பையும் மத்திய அரசு கொண்டு வந்ததால் இனி ஜிஎஸ்டி மோசடி தொடர்பான புகார்களை அமலாக்கத்துறை விசாரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications