கடும் குளிர், விபத்து காரணமாக டெல்லியில் பலியாகும் விவசாயிகள் - 20ஆம் தேதி துக்கதினம் அனுஷ்டிப்பு
டெல்லியில் கடும் குளிரிலும் விடாமல் போராட்டம் நடத்தும் விவசாயிகள் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் வரும் 20ஆம் தேதி துக்கதினம் அனுஷ்டிக்கப்படும் என
டெல்லி: உடலை உறைய வைக்கும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் சிலர் முதுமை காரணமாக உயிரிழந்துள்ளனர். போராட்டக்களத்திற்கு வரும் வழியில் நேர்ந்த விபத்தில் சிக்கியும் விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்ற சீக்கிய மதகுரு தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மரணமடைந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வரும் 20ஆம் தேதியை துக்கதினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லையில் கடந்த 23 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பது விவசாயிகள் ஒரே கோரிக்கை.
விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை. இது வரை நடைபெற்ற பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தி வருகிறது. அதை ஏற்க மறுத்த விவசாயிகள் வேளாண் சட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று கூறி போராட்டத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளனர்.
தலைநகரம் தகிக்கிறது
கடும் குளிரிலும் விவசாயிகளின் போராட்டத்தால் தலைநகருக்கு செல்லும் சாலைகள் தகிக்கிறது. கடந்த 23 நாட்களாக விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். சாலைகளில் உண்டு உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவது நாடுமுழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் உயிர் பலியும் ஏற்படுகிறது.
குளிருக்கு பலியாகும் விவசாயிகள்
கடும் குளிரிலும் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தில் இதுவரை 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக டெல்லியில், போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பாதிக்கும் மேலானோர் முதியவர்கள். தாங்கள் வந்த டிராக்டர்களில்தான் இவர்கள் இரவு தூங்குகிறார்கள்.
விபத்தில் சிக்கிய விவசாயிகள்
கடந்த சில நாட்களுக்கு பஞ்சாப் மாநிலம் மொகாலி மற்றும் பாட்டியாலா மாவட்டங்களில் இருந்து நேற்று டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் இரு வேறு விபத்துகளில் சிக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.இதனை தொடர்ந்து இதுவரை குளிர் மற்றும் விபத்து காரணமாக பலியான விவசாயிகளின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் பஞ்சாப் மாநில அரசு வழங்கியுள்ளது.
பலியாகும் விவசாயிகள்
போராட்டம் தொடங்கிய நாள் முதல் நாள்தோறும் ஒருவர் பலியாகி வருவதாக சிந்துபூர் பாரத கிசான் யூனியன் தலைவர் ஜக்ஜித் சிங் கூறியுள்ளார். அந்த விவசாயிகளுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வரும் 20ஆம் தேதி துக்க தினம் கடைபிடிக்கப்படும் என்றும் அன்று அனைத்து இடங்களிலும் உயிரிழந்த விவசாயிகளுக்கு அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியுள்ளார். அதற்காக கிராமங்களிலிருந்து உயிரிழந்த விவசாயிகளின் புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.
தற்கொலை செய்து கொண்ட சீக்கிய மதகுலு
இதனிடையே விவசாயிகள் போராட்டம் நடத்திவரும் குண்ட்லி எல்லையில் ஹரியானா மாநிலம் கர்னூலைச் சேர்ந்த பாபா ராம் சிங் என்பவரும் கலந்துகொண்டார். இவர் சீக்கிய மதகுருவாகவும் இருந்து வருகிறார். போராட்டத்தில் விவசாயிகளுடன் கலந்துகொண்ட இவர் விவசாயிகள் போராட்டக்களத்தில் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்து மனம் நொந்து தன்னுடைய துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
விவசாயிகளின் நிலை மோசம்
தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதி வைத்த கடிதத்தில், போராட்டம் நடத்தும் விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கவலையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், போராடும் விவசாயிகளை அரசு மிக மோசமாக நடத்தி வருவதாகவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே, கடும் குளிர் மற்றும் விபத்துகளால் 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்த நிலையில் சீக்கிய மதகுரு தற்கொலை செய்துகொண்டிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.