மதவாதத்தை பரப்புகிறார்! கல்லூரி வளாகத்தில் நமாஸ் செய்த பேராசிரியருக்கு கட்டாய விடுப்பு.. பரபர உபி
டெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள கல்லூரி ஒன்றின் வளாகத்தில் நமாஸ் செய்த முஸ்லிம் பேராசிரியருக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒருமாதம் கட்டாய விடுப்பில் அவர் அனுப்பப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் ஸ்ரீவார்ஷ்னே என்ற கல்லூரி அமைந்துள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த கல்லூரியில் சட்டக்கல்வி பேராசிரியராக எஸ்ஆர் காலித் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை வளாகத்தில் தொழுகை செய்தார்.

வெளியான வீடியோ
இதுதொடர்பான வீடியோ, போட்டோக்கள் இணையதளத்தில் பரப்பி விடப்பட்டன. இதற்கு இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்னொரு தரப்பு அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அதாவது கல்லூரி வளாகத்தில் யாருக்கும் இடையூறு இன்றி தொழுகை செய்வதில் தவறில்லையே என கருத்துகள் தெரிவித்தனர். இந்த விஷயம் பெரும் விவாதப்பொருளானது.

போராட்டம்-புகார்
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, ஆர்எஸ்எஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போலீசிலும் புகார் செய்யப்பட்டது. அதோடு கல்லூரி வளாகத்தில் பேராசிரியர்தொழுகை நடத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறார். பொது இடத்தில் தொழுகை என்பது மதவாதத்தை பரப்பும் செயலாகும். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். அதோடு நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.

கட்டாய விடுப்பு
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் பேராசிரியர் எஸ்ஆர் காலித்துக்கு ஒருமாதம் கட்டாய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் குறித்து விசாரணைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கல்லூரி நிர்வாகம் கூறியுள்ளது.

அறிக்கை கேட்கும் போலீஸ்
இதற்கிடையேபுகார் தொடர்பாக குவார்ஸி போலீஸ் நிலையத்தின் சார்பில் சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. இன்னும் போலீஸ் தரப்பில் வழக்குப்பதிவு செய்யாத நிலையில் விசாரணை அறிக்கை வந்த பிறகு அதனடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக போலீசாரும் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications