பஞ்சாப் நலனில் மத்திய அரசு ஆதரவாக இருக்கும் - ஆம் ஆத்மி வெற்றிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தம் 117 தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக தேர்தல் நடந்தது. விவசாயிகளின் போராட்டத்துக்குப் பிறகு நடக்கும் பஞ்சாப் தேர்தலை இந்தியா உற்றுநோக்கி வருகிறது.
பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தேர்தல் நடந்தது. இந்த ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.

ஆம் ஆத்மி
பஞ்சாப் மாநிலத்தில் முதன் முறையாக சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி மிகப்ப்பெரிய வெற்றியைப் பெற்று, ஆட்சியைப் பிடித்திருக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. மிகப் பெரிய கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்துள்ளது. விரைவில் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சி அமைக்கவிருக்கிறது ஆம் ஆத்மி.

பிரதமர் மோடி
பஞ்சாப் மாநிலத்தில் முதன் முறையாக ஆட்சி அமைக்க இருக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. தன்னுடைய ட்விட்டரில், ''பஞ்சாப் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். பஞ்சாபின் நலனுக்கான மத்திய அரசு அனைத்து ஆதரவையும் வழங்கும் என உறுதியளிக்கிறேன்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

காங்கிரஸ்
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்திருக்கிறது ஆம் ஆத்மி. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 18 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி என முக்கிய தலைவர்கள் அனைவரும் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

பஞ்சாப்
பஞ்சாப் மாநிலத்தைப் பொருத்தவரை, விவசாயிகள் போராட்டம் மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டது. டெல்லியில் விவசாயிகள் போராடும் போது, பாஜக எந்த உதவியும் செய்யவில்லை, அதோடு, விவசாயிகள் இறந்தபோது அதற்கு பிரதமர் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதால் பஞ்சாப் விவசாயிகள் பாஜக மீது அதிருப்தியில் இருந்தனர்.

பாஜக
இந்நிலையில் தான் பஞ்சாப் தேர்தலை எதிர்கொண்டது பாஜக. இந்த தேர்தலில் பாஜகவுக்கு பெரிய எதிர்பார்ப்பு இல்லை. கடந்த தேர்தலில் பாஜக, அகாலிதளத்துடன் கூட்டணி வைத்து பாஜக மூன்று இடங்களைக் கைப்பற்றியது. இந்த தேர்தலில் அகாலிதளம் தனித்து களம் இறங்குகிறது.












Click it and Unblock the Notifications