"தாக்குதலை நிறுத்துங்க.. இதற்கு மேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது!" பிரதமர் மோடி பேச்சு
டெல்லி: நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்திற்குப் பிரதமர் மோடி பதிலளித்தார். பாகிஸ்தான் நீண்ட காலத்திற்கு மறக்கவே முடியாத பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் இருப்பதாகத் தெரிவித்த அவர், இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் போர் நிறுத்தம் கோரி கெஞ்சியதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நேற்று முதல் நடந்து வருகிறது. நேற்றைய தினம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இது தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து நேற்று மாலை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெயசங்கர் ஆபரேஷன் சிந்தூர் குறித்துப் பேசினார்.

இதற்கிடையே இரண்டாவது நாளான இன்று உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கமளித்தார். அவரை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி லோக்சபாவில் பேசினார். அப்போது மத்திய அரசு ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கவில்லை எனத் தொடங்கி ராகுல் காந்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதற்கிடையே இப்போது இந்த விவாதத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரை அளித்து வருகிறார். ஆபரேஷன் சிந்தூரில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டதாகவும் எங்கு எப்போது தாக்குதல் நடத்தலாம் என்பதை இந்திய ராணுவமே முடிவு செய்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியாவின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறியதாகவும் அவர் தெரிவித்தார்.
பதிலடியை நிறுத்துங்கள் எனப் பாகிஸ்தான் கெஞ்சியது என்ற பிரதமர் மோடி, தயவு செய்து தாக்குதலை நிறுத்துங்கள், இதற்கு மேல் தாங்க முடியாது எனப் பாகிஸ்தான் கதறியது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார். ஆபரேஷன் சிந்தூர் குறிக்கோள் தெளிவாக இருந்தது என்ற பிரதமர் மோடி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் ராணுவத்தை மண்டியிட வைத்தோம் என்றும் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கும் முகாம்கள் குறிவைத்து அழிக்கப்பட்டன என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆபரேஷன் சிந்தூரை பல ஆண்டுகளுக்குப் பாகிஸ்தான் நினைவில் வைத்திருக்கும் என்ற அவர், ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது என்றும் எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications