நேஷனல் ஹெரால்டு வழக்கு.. காங்கிரஸ் கார்கேவுக்கு கிடுக்கிப்பிடி.. 7 மணிநேரம் விசாரித்த அமலாக்கத்துறை
புதுடெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தி, சோனியா காந்தியிடம் விசாரணை நடந்த நிலையில் யங் இந்தியா நிறுவனத்துக்கு அமலாக்க பிரிவினர் சீல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு துவங்கிய பத்திரிகை நேஷனல் ஹெரால்டு. இதனை நடத்தி வந்த 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நிதி பிரச்சனையில் சிக்கியது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி ரூ.90.25 கோடி கடன் வழங்கியது.
இதனை திரும்ப செலுத்த முடியாததால் அதன் பங்குகளை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை இயக்குனர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் வாங்கியது. இந்நிலையில் தான் ரூ.90 கோடி கடனுக்காக அசோசியேட்டடு ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்து, பங்குகள் மாற்றப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

ராகுல்-சோனியாவிடம் விசாரணை
இதுபற்றி பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக ராகுல் காந்தி, சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் வழங்கியது. இதையடுத்து ராகுல்காந்தி 5 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார். சோனியா காந்தி 3 முறை ஆஜராகி விளக்கம் அளித்தார். இவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.

சீல் வைத்த அதிகாரிகள்
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ‘யங் இந்தியா' நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தி அதிகாரிகள் அதற்கு சீல் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கப்பிரிவு சார்பில் விசாரணைக்கு வரும்படி சம்மன் வழங்கியது. இவர் ‛யங் இந்தியா' நிறுவனத்தின் பங்குதாரராக உள்ள நிலையில் சம்மன் வழங்கப்பட்டது. நேற்று நாடாளுமன்றத்துக்கு அவர் சென்ற நிலையில் சம்மன் வழங்கப்பட்டிருந்தது.

7 மணிநேரம் விசாரணை
இதையடுத்து அவர் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அதன்பிறகு அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் 7 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து அவர் அலுவலகத்தில் இருந்து சென்றார். இவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்டன.
Recommended Video

அமலாக்கப்பிரிவுக்கு எதிர்ப்பு
இதற்கிடையே தான் மத்திய பாஜக அரசு சார்பில் காங்கிரஸ் செயல்பாட்டை முடக்கும் வகையில் ராகுல், சோனியாவை தொடர்ந்து மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்பியுள்ளதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்நிலையில் அமலாக்கப்பிரிவினரின் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் மல்லிகார்ஜூன கார்கே இன்று கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications