நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.. ராஜஸ்தான் மாணவி முதலிடம்.. 9.93 லட்சம் பேர் தேர்ச்சி!
டெல்லி: இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
நாடு முழுக்க எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினர்.
நாடு முழுக்க 17,78,025 பேர் இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு எழுதினர். மொத்தம் 497 நகரங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. அதில் 3570 சென்டர்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்பட்டது.

சர்வர் பிரச்னை
இந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சர்வர் பிரச்னை காரணமாக நீட் தேர்வு முடிவுகள் பார்ப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நீட் தேர்வு வெளியான இணையதளத்தில் மதிப்பெண்க பார்க்க முடியாமல் மாணவர்கள் திணறினர்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு
இந்த நிலையில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அதில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா 715 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். டெல்லியைச் சேர்ந்த மாணவர் வத்சா ஆஷிஷ் பத்ரா 2ம் இடம் பிடித்துள்ளார். அதேபோல் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர்
தமிழக அளவில் மாணவர் திரிதேவ் விநாயகா 705 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 30வது இடத்தை பிடித்துள்ளார். அதேபோல் தமிழக மாணவி ஹரிணி 702 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடம்பிடித்துள்ளார். இவர் தேசிய அளவில் 43வது இடத்தை பிடித்துள்ளார். நடப்பாண்டில் நீட் தேர்வு எழுதியவர்களில் 9,93,069 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எப்படி பார்க்கலாம்
நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் neet.nta.nic.in. பக்கத்தில் தங்களது நீட் தேர்வு மதிப்பெண் சான்றுகளை டவுன்லோட் செய்ய முடியும். முன்னதாக மாணவர்கள் ரேங்கிங்கில் பயன்படுத்தப்பட்ட முறைகள் மாற்றப்பட்டு புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு மாணவர்கள் ஒரே மார்க் எடுத்தால், டை - ப்ரேக் என்று அழைக்கப்படுகிறது. இந்த முறை இரண்டு மாணவர்கள் ஒரே மார்க் எடுத்தால், உயிரியல் பிரிவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவருக்கே அதிக ரேங்க் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரே மார்க் இருந்தால், வேதியியல் பிரிவில் அதிக மதிப்பெண் உள்ள மாணவருக்கு அதிக ரேங்க் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications