செத்தா கூட... கனவுல கூட... பாஜக பக்கம் தலையே வெச்சு படுக்கமாட்டேன்... அடித்து சொல்லும் கபில் சிபல்
டெல்லி: தாம் கனவில் கூட பாரதிய ஜனதா கட்சியில் சேர வேண்டும் என நினைத்ததே இல்லை என மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காங்கிரஸில் சோனியா காந்தி தலைமைக்கு எதிராக 23 மூத்த தலைவர்கள் கடிதம் எழுதிய விவகாரம் இன்னமும் ஓயவில்லை. சோனியாவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய தலைவர்கள் ஓரம்கட்டப்படுவதும் காங்கிரஸை விட்டு வெளியேறுவதும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் ஜிதின் பிரசாதா, காங்கிரஸில் இருந்து வெளியேறி பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார். ராஜஸ்தானில் சச்சின் பைலட்டும் அனேகாக ஏதோ ஒரு முடிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்.
இதனால் காங்கிரஸ் கட்சி மேலிடம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபிசில அளித்துள்ள பேட்டி: ஜிதின் பிரசாதா ஏதோ சில காரணங்களுக்கு சில் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். அதனை நான் எதிர்க்கவில்லை. அதற்காக அவர் பாஜகவில் போய் இணைந்ததை புரிந்து கொள்ளவும் முடியவில்லை. நாங்கள் உண்மையான காங்கிரஸ்காரர்கள்.
என்னுடைய வாழ்க்கையில் ஒருபோதும் பாஜகவில் சேர வேண்டும் என நினைத்ததே இல்லை. ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் என்னை கட்சியை விட்டு வெளியேறுமாறு நீக்கினால் கூட பாஜக பக்கம் போகவே மாட்டேன். இவ்வாறு கபில் சிபல் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ஜிதின் பிரசாதா, பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு உரிய மரியாதைகள் கொடுத்திருக்க வேண்டும். அவரை புறக்கணித்திருக்கக் கூடாது. காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலராக இருந்தார். மேற்கு வங்க தேர்தல் பொறுப்பாளராகவும் இருந்தார். காங்கிரஸ் கட்சியை இப்போது ஜிதின் பிரசாதா குறை கூறுவது என்பது வருத்தமானது என்றார்.