''நாங்க இப்ப இந்தியாவோட கூ….க்கு மாறிட்டோம்… அப்போ நீங்க..?'' உலக நாடுகளை தெறிக்கவிட்ட நைஜீரியா!
டெல்லி: டுவிட்டரை தடை செய்த நைஜீரியா இந்தியாவின் 'கூ' ஆப்-ஐ பயன்படுத்த தொடங்கி இருக்கிறது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பல்வேறு நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.
அதுவும் நமது இந்திய மக்களின் வாழ்வில் மேற்கண்ட சமூக வலைத்தளங்கள் ஒரு அங்கமாக மாறிப் போய் விட்டன.
இந்தியாவில் கருத்துரிமை சுதந்திரம் ஜனநாயக பாரம்பரியம்.. டுவிட்டர் கருத்து தவறானது மத்திய அரசு பதிலடி
நம்பகத்தன்மை இல்லை
நகரம் முதல் கிராமம் வரை சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தாதவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். இந்தியாவில் இந்த வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள், தகவல்களில் நம்பகத்தன்மை இல்லை என மத்திய அரசு குற்றம்சாட்டியது. இந்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் விதத்தில், மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை அறிமுகப்படுத்தியது.
டுவிட்டர்-மத்திய அரசு சண்டை
டுவிட்டர் தவிர மற்ற சமூக ஊடக நிறுவனங்கள் இதை முதலில் ஒப்புக் கொண்டன. ஆனால் கடைசி வரை பிடிவாதம் பிடிக்கும் டுவிட்டர், இன்று வரை இந்த விதிகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது. ஏற்கனவே மத்திய அரசுக்கும், டுவிட்டருக்கும் இடையே டூல் கிட், ப்ளூ டிக் தொடர்பாக கடும் சண்டை நடந்து வருகிறது.
நைஜீரியா அதிரடி தடை
இந்தியா மட்டுமின்றி பல்வேறு அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கும், டுவிட்டருக்கும் இடையே சிறு உரசல்கள் நிகழ்ந்து வருகின்றன. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் டுவிட்டர் கணக்கையும் அவ்வப்போது நீக்கி விளையாட்டு காட்டியது டுவிட்டர். இந்த நிலையில் நைஜீரியா நாட்டிலும் டுவிட்டருக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
டுவிட்டருக்கு எதிராக ஆவேசம்
நைஜீரியா அதிபர் முகமது புகாரி பிரிவினைவாதிகளுக்கு எதிராக டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவித்து இருந்தார். அந்த கருத்து சரியல்ல என்று டுவிட்டர் அதனை நீக்கியது. இதனை தொடர்ந்து அதிபருக்கும், டுவிட்டர் நிறுவனத்துக்கும் இடையே கடும் சண்டை முற்றியது. இதனால் ஆத்திரம் அடைந்த அதிபர் முகமது புகாரி, நைஜீரியாவில் டுவிட்டருக்கு அதிரடி தடை விதித்தார்.
koo ஆப்-க்கு மாறினார்
ஆனால் அவர் அடுத்து செய்த செயல்தான் இப்போது உலகத்தின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. டுவிட்டருடன் உறவை முறித்தமுகமது புகாரி, டுவிட்டருக்கு மாற்றாக கருதப்படும் இந்தியாவின் koo ஆப்-பில் அரசின் ஆதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார். இதனால் koo, இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் பிரபலமாக தொடங்கியுள்ளது.
அது என்ன 'கூ' ஆப்?
'கூ' ஆப் தொழில்முனைவோர்களான அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மயாங்க் பித்வட்கா ஆகியோரால் இணைந்து பெங்களூரில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்கள், சினிமா, விளையாட்டு பிரபலங்கள் 'கூ' ஆப்-ஐ பயன்படுத்தி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களின் அரசு துறைகளும் முக்கிய தகவல்களை இதில் பகிர்ந்து வருகின்றன. முதலில் கன்னட மொழியில் மட்டும் இருந்த
'கூ' ஆப் பின்னர் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட மொழிகளை சேர்த்தது. கடந்த மே மாதம் நிலவரப்படி 60 மில்லியன் மக்கள் 'கூ' ஆப் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.