பிரதமர் மோடியுடன் நிதீஷ்..பழைய படத்தை ட்விட் செய்த பிரஷாந்த் கிஷோர்.. உடனே டெலிட்.. என்னவா இருக்கும்
டெல்லி: பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரஷாந்த் கிஷோர் இன்று பீகார் முதல்வர் நிதீஷ் குமாரை சீண்டும் வகையில் போட்ட ஒரு டுவிட் இணையத்தில் பேசுபொருளானது. ஆனால் சிறிது நேரத்திலேயே தனது ட்விட்டை பிரஷாந்த் கிஷோர் அழித்தது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து யாரும் எதிர்பாராத வகையில் திடீரென நிதீஷ் குமார் விலகினார்.
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவின் ஆர்.ஜே.டி மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார்.

பிரசாந்த் கிஷோர் கிண்டல்
இதை சமீபத்தில் பிரசாந்த் கிஷோர் கிண்டல் செய்து கருத்து தெரிவித்தார். அப்போது பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ''நிதீஷ் குமார் ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆளும் கூட்டணியில் இருந்தார். தற்போது அவர் எதிர்க்கட்சியாக மாறியுள்ளார். இதை எப்படி நியாயப்படுத்த முடியுமென்பது மக்கள் முடிவு செய்யட்டும். ஆனால், பீகாரில் ஏற்பட்டுள்ள புதிய கூட்டணி தேசிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை'' என்றார்.

பாஜகவுடன் இருப்பது தான் விருப்பம்
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது முயற்சியை மட்டம் தட்டும் வகையில் பிரஷாந்த் கிஷோரின் கருத்து அமைந்தது. பிரஷாந்த் கிஷோரின் இந்த கருத்து குறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த நிதிஷ் குமார், ''பிரஷாந்த் கிஷோருக்கு பாஜகவுடன் இருப்பது தான் விருப்பம்'' என்று கூறினார். இது தொடர்பாக நிதிஷ் குமார் கூறியதாவது:-

உள்ளூர் அரசியல் பற்றி உளறுகிறார்
பீகாரில் 2005 க்கு பின்னர் என்னென்ன மேம்பாட்டு பணிகளை செய்துள்ளோம் என்று பிரசாந்த் கிஷோருக்கு தெரியாது. அவருக்கு விளம்பரம், அறிக்கைகள், பிரசார உத்திகள் ஆகியவை மட்டுமே தெரியும். அதை வைத்துக்கொண்டு உள்ளூர் அரசியல் பற்றி உளறி கொட்டுகிறார். முன்பு பிரசாந்த் கிஷோர் என்னுடன் இருந்தார். அப்போது இந்த பணியில் இருந்து விலகி என்னுடன் வந்துவிடுமாறு நான் கோரினேன்.

நிதீஷ் குமாருக்கு பதிலடி
ஆனால் இதை அவர் கேட்கவில்லை. நாடு முழுவதும் பல கட்சிகளுக்காக அவர் பணியாற்றி இருக்கிறார். இது பிரஷாந்த் கிஷோரின் தொழில். பீகாரை பொறுத்தவரை அவர் நினைத்ததை அவர் செய்யலாம்'' என்று பேசியிருந்தார். இந்த நிலையில், நிதீஷ் குமாரின் இந்த பேச்சுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், பிரஷாந்த் கிஷோர் தனது ட்விட்டரில், நிதீஷ் குமார் பிரதமர் மோடியுடன் சிரித்துக்கொண்டு இருக்கும் புகைப்படங்கள் அடங்கிய பதிவு ஒன்றை வெளியிட்டார். இந்த பதிவுடன் எந்த ஒரு கருத்தையும் பிரஷாந்த் கிஷோர் பதிவிடவில்லை. ஆனால் சிறிது நேரத்திலேயே இந்த பதிவை பிரஷாந்த் கிஷோர் அழித்துவிட்டார்.

எதிர்க்கட்சியாக மாறியுள்ளார்
ஏற்கனவே நிதீஷ் குமாருக்காக தேர்தலில் பணியாற்றியுள்ள பிரஷாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலும் இணைந்தார். எனினும், அக்கட்சியில் இருந்து சில மாதங்களுக்குப் பிறகு பிரஷாந்த் கிஷோர் விலகிவிட்டார். இந்த சூழலில், நிதீஷ் குமாரை சீண்டும் வகையில் பிரஷாந்த் கிஷோர் பதிவிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications