மணிப்பூரில் காலியான கட்சி! விரக்தியின் உச்சத்தில் நிதிஷ்குமார்! பாஜகவை வீழ்த்த கொடுத்த நறுக் அட்வைஸ்
டெல்லி: நிதிஷ்குமார் கட்சிக்கு பாஜக அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ள நிலையில், அவர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
பீகாரில் கடந்த மாதம் நடந்த அரசியல் குழப்பத்தை யாராலும் மறந்துவிட முடியாது. இதுநாள் வரை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், பாஜக ஆட்சியைக் கவிழ்த்த நிலையில், பீகாரில் அதுவே அவர்களுக்கு நடந்தது.
அங்கு பாஜக ஆதரவுடன் தான் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமார் ஆட்சி அமைத்து இருந்தார். இருப்பினும், இரு தரப்புக்கும் இடையே மோதல் தொடர்ந்தே வந்தது.
நிதிஷ் கட்சி எம்எல்ஏக்களை தூக்கிய பாஜக: 2024 தேர்தலில் இருக்கு ட்விஸ்ட்.. சவால் விடுத்த ஜேடியூ
பீகார்
இந்தச் சூழலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டார் நிதிஷ்குமார். பீகாரில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். இது பாஜகவுக்குப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அதிகப்படியான இடங்களில் வென்ற பின்னர், பீகாரில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்தச் சம்பவம் நடந்த ஒரு சில வாரங்களிலேயே பாஜக இதற்குப் பதிலடி கொடுத்துள்ளது.
மணிப்பூர்
மணிப்பூர் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கு மொத்தம் 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். அவர்களில் 5 பேர் நேற்று நள்ளிரவு பாஜகவில் ஐக்கியமாகினர். கட்சியில் 3இல் 2 பங்கு உறுப்பினர்கள் கட்சி மாறியதால், அவர்கள் மீது சட்ட ரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாது. பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் வெளியேறிய சில வாரங்களிலேயே இந்தச் சம்பவம் நடந்துள்ளது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
நெருக்கடி
முன்னதாக கடந்த வாரம் அருணச்சால பிரதேசத்தின் ஒரே ஜேடியு எம்எல்ஏவும் பாஜகவில் இணைந்து இருந்தார். பீகார் தவிர மற்ற மாநிலங்களில் இருக்கும் நிதிஷ் கட்சி எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமாவது அவருக்கு நெருக்கடியை அதிகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், பாஜக எம்பியும் முன்னாள் பீகார் துணை முதல்வருமான சுஷில் குமார் மோடி தனது ட்விட்டரில், "அருணாச்சல பிரதேசத்தைத் தொடர்ந்து இப்போது மணிப்பூரிலும் ஜேடியு கட்சி காலி.. சீக்கிரம் பீகாரிலும் இதே நிலை ஏற்படும்" எனப் பதிவிட்டுள்ளார்.
பகல் கனவு
இந்நிலையில், இதற்கு ஜேடியு கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "அருணாச்சல் பிரதேசத்திலும் சரி, மணிப்பூரிலும் சரி.. நாங்கள் பாஜகவை வீழ்த்தியே தேர்தலில் வென்று இருந்தோம் என்பதை மறந்துவிட வேண்டாம். எனவே, ஜேடியு காலியாகும் எனப் பகல் கனவு காண வேண்டாம். கூட்டணி தர்மத்தை நீங்கள் கடைப்பிடிக்காமல் போனதே இதற்கெல்லாம் ஒரு காரணம்.
2024 தேர்தல்
பாஜகவின் நடத்தை மணிப்பூரில் மீண்டும் மக்களுக்குத் தெரிகிறது. 2015 தேர்தலில் பீகாரில் பிரதமர் 42 பேரணிகளில் கலந்து கொண்டார். அப்போதும் வெறும் 53 இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். 2024-ல் நாடு ஜூம்லாக்களில் இருந்து விடுபடும்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் பாஜக குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்க முயல்வதாகவும் சாடினார்.
நிதிஷ்குமார்
மேலும் இந்த விவகாரம் குறித்து ஜேடியு தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் கூறுகையில், "பண பலத்தை வைத்துக் கொண்டு அவர்கள் இஷ்டத்துக்கு ஆட்சியைக் கவிழ்க்கின்றனர். பிரதமர் இந்த விதிமுறைகளை மறுவரையறை செய்துள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகியதற்கு மணிப்பூரில் இருக்கும் எங்கள் கட்சி 6 எம்எல்ஏக்களை என்னைச் சந்தித்து நன்றி கூறி இருந்தனர். ஆனால், ஒரு வாரத்தில் அவர்களை இழுத்துக் கொண்டனர்.
கூட்டணி
மற்ற கட்சிகளில் இருந்து வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை பாஜக உடைக்கிறது. நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தபோது அவர்கள் (பாஜக) எங்கள் எம்.எல்.ஏ.க்களுக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால், இப்போது எம்எல்ஏக்களையே அவர்கள் பக்கம் இழுக்கிறார்கள். இதையெல்லாம் மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வரும் தேர்தலில் இதற்குப் பதில் கொடுப்பார்கள்
வீழ்த்தும் வழி
பாஜகவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அப்போது தான் மக்கள் ஆதரவு கிடைக்கும். அனைத்து மாநிலங்களிலும் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். இது குறித்து மூத்த தலைவர்களை நேரில் சந்தித்து ஆலோசிக்க விரைவில் டெல்லி செல்ல உள்ளேன்" என்றும் அவர் தெரிவித்தார்.