கொரோனாவை கட்டுப்படுத்த 5 நகரங்களில் லாக்டவுன் - அலகாபாத் ஹைகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் தடை
உத்தரபிரதேசத்தில் ஊரடங்கு விதிக்க உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
டெல்லி: கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள உத்தரபிரதேசத்தின் ஐந்து நகரங்களில் ஊரடங்கை விதிக்க உத்தரபிரதேச அரசுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக தினசரியில் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்துள்ளது. முதற்கட்டமாக இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மே 15 வரை அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் உத்தரபிரதேச அரசு ஏற்கனவே மாநிலம் முழுவதும் ஊரடங்கு விதிப்பதாக அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் துப்புரவு, சுத்திகரிப்பு மற்றும் அவசர சேவைகள் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அவ்வாறு விதியை மீறி முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு முதல் முறை அபராதமாக ரூ.1000 வசூலிக்கப்படும். மீண்டும் மறுமுறை முகக்கவசம் அணியாமல் வந்தால் ரூ.10000 அபராதம் விதிக்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் புதிதாக 30,596 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. மேலும் 129 பேர் கொரோனாவால் உயிர் இழந்தனர்.
இந்நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமையன்று பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் ஆகிய நகரங்களில் 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை லாக்டவுன் அமல்படுத்துமாறு உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது.
கொரோனா வைரஸ் அதிகம் பாதிப்பு உள்ள பிரயாக்ராஜ், லக்னோ, வாரணாசி, கான்பூர் மற்றும் கோரக்பூர் உள்ளிட்ட நகரங்களில் லாக்டவுன் விதிக்க மாட்டோம் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்தது. மேலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் உத்தர பிரதேச மேல்முறையீடு செய்தது.
உத்தர பிரதேச அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று விசாரணை செய்தது. சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, அவசரகால பட்டியலுக்கான விஷயத்தை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான பெஞ்ச் முன் குறிப்பிட்டிருந்தார். துஷார் மேத்தா, நேற்று நிறைவேற்றப்பட்ட உயர்நீதிமன்றத்தின் உத்தரவைப் பற்றி குறிப்பிடுகையில், ஒரு வாரத்திற்கு நீதித்துறை உத்தரவால் மெய்நிகர் ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது என்று கூறினார்.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உத்தரவுக்கு பதிலளித்த உ.பி. அரசு நேற்று மாலை குறிப்பிட்ட ஐந்து நகரங்களில் முழுமையான ஊரடங்கு இருக்காது என்று கூறியது. வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது உத்தர பிரதேச அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்பட்டாலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. செவ்வாய்க்கிழமையன்று 29,754 புதிய கோவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 162 பேர் மரணமடைந்துள்ளனர். மாநிலத்தில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.