இந்தியா மீது முஸ்லீம்கள் நம்பிக்கை வைத்துள்ளதால் தற்கொலைப்படை தாக்குதலே இல்லை: ஹிஜாப் வழக்கில் வாதம்
டெல்லி: "மற்ற இஸ்லாமிய நாடுகளை ஒப்பிடும் போது, இந்தியாவில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் ஏதும் அரங்கேறவில்லை" எனக் கூறிய வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே, "இதுதான் இந்தியா மீது முஸ்லிம்கள் வைத்திருக்கும் நம்பிக்கை" எனத் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஹிஜாப் வழக்கு விசாரணையின் போது, துஷ்யந்த் தாவே இவ்வாறு வாதிட்டார். மேலும், மதம் சார்ந்த விஷயத்தில் நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுதந்திரத்தை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் புரிந்துகொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.
கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் பி.யு. கல்லூரியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து சென்ற முஸ்லிம் மாணவிகளுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹிஜாபுக்கு தடை - கொந்தளிப்பு
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து கர்நாடகாவில் உள்ள மற்ற கல்லூரிகளிலும், ஹிஜாப் அணிந்து செல்வதற்கு எதிர்ப்பு வலுத்தது. இதனால் பல கல்லூரிகளில் மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து மோதலிலும் ஈடுபட்டனர். பிரச்சினை கைமீறி சென்றதால் கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது. அதே சமயத்தில், ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாளங்களுடன் மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு செல்ல கர்நாடகா அரசு அதிரடியாக தடை விதித்தது. இது இஸ்லாமிய மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

உயர் நீதிமன்றம் தள்ளுபடி
இதனிடையே, கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக அம்மாநில உயர் நீதிமன்றத்தில் முஸ்லிம் மாணவிகள் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை இம்மாதத் தொடக்கத்தில் விசாரித்த உயர் நீதிமன்றம், ஹிஜாப் என்பது இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அவர்களுடன் சேர்ந்து சில முஸ்லிம் அமைப்புகளும் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருதரப்பு வழக்கறிஞர்களும் பல முக்கியமான வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். அந்த வகையில், நேற்று நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் போது முஸ்லிம் மாணவிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷ்யந்த் தேவ் பரபரப்பான வாதங்களை முன்வைத்தார். அவரது வாதங்கள் பின்வருமாறு:

இந்திய முஸ்லிம்களின் சகிப்புத்தன்மை
இந்திய முஸ்லிம்களின் சகிப்புத்தன்மைக்கு வரலாற்று காலம் தொட்டே பல உதாரணங்களை கூற முடியும். முக்கியமாக, முகலாய அரசர் அக்பர் காலத்தில் அனைத்து மதத்தினருக்கும் சம உரிமைகள் வழங்கப்பட்டன. அந்தக் காலக்கட்டத்தில் முஸ்லிம்கள், மற்ற மதத்தினரின் உரிமைகளையும், சடங்குகளையும் மதித்தனர். மற்ற மதங்கள் மீது மிகப்பெரிய சகிப்புத்தன்மையை கொண்டிருந்தனர். அதேபோல, சுதந்திரத்துக்கு பிறகு அமைக்கப்பட்ட முதல் அரசியலமைப்பு நிர்ணய சபையில், சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட பல சிறப்பு உரிமைகளை நீக்கக் கோரி வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்பொழுதும், இந்திய முஸ்லிம்கள் சகிப்புத்தன்மையுடன் அமைதிக் காத்தனர்.

'மத விஷயத்தில் தலையிடுவது சரியல்ல'
இவ்வாறு சகிப்புத்தன்மையுடன் இருக்கும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையின மக்கள், நம் நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையை சீர்குலைக்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டம் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள மதச் சடங்குகள் சார்ந்த உரிமையில் தலையிடுவது சரியல்ல. ஹிஜாப் அணிவது இஸ்லாத்தில் அத்தியாவசியமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒருவர் அதனை அணிய விரும்பும் போது அதில் நீதித்துறையும், அரசாங்கமும் தலையிடுவது முறையல்ல.

'இதுதான் இந்திய முஸ்லிம்கள்'
உலகில் உள்ள இஸ்லாமிய நாடுகளில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் ஒரே ஒரு தற்கொலை தாக்குதல்தான் நடத்தப்பட்டிருக்கிறது. நம் நாட்டின் மீது இந்திய முஸ்லிம்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு இதுவே சிறந்த சான்றாகும். ஒருவர் தனது மதத்தை எப்படி பின்பற்றுகிறார் என்பது தனிநபர் விருப்பம் சார்ந்தது. அது ஹிஜாப் அணிவதாக இருந்தாலும் சரி அல்லது திருநீறு அணிவதாக இருந்தாலும் சரி. அது அவரவர் விருப்பம். மதம் சார்ந்த விஷயத்தில் நமது அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்கும் முழு சுதந்திரத்தை கொடுத்துள்ளது. இதை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிகள் புரிந்துகொள்ளவில்லை. இவ்வாறு துஷ்யந்த் தாவே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications