உலக அளவில் காற்று மாசில் டெல்லி நம்பர் 1.. கெஜ்ரிவால் களமிறக்கிய "அவசர" பிளான்.. இனி இது கட்டாயம்
டெல்லி: உலக அளவில் காற்றால் அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் டெல்லி முதல் இடத்தில் இருக்கிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் ஓராண்டில் ஏற்படும் உயிரிழப்புகளில் 17.8 சதவிகித உயிரிழப்புகள் காற்று மாசு காரணமாக ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு இருக்கையில், டெல்லியில் காற்று மாசை கட்டுப்படுத்த தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உயிரிழப்பு
உலகம் முழுவதும் காற்று மாசு என்பது பலரின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துதான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை. கடந்த 2019ல் மட்டும் சுமார் 6 மில்லியன் மக்கள் இந்த காற்று மாசு காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இதனை குறைக்க உலக நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன. இவ்வாறு குறைக்காவிடில் அடுத்தடுத்த ஆண்டுகளில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

மாசு
உலக அளவில் இப்படியெனில் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 16.7 லட்சமாக இருக்கிறது. காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் டெல்லியும், கல்கத்தாவும் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றன. இது டெல்லியை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தீபாவளி மற்றும் பொங்கல் காலகட்டங்களில் டெல்லி கடுமையான காற்று மாசால் இந்நகரம் மூச்சு திணறி வருகிறது.

புதிய அறிவிப்பு
இதனை தடுக்க ஆம் ஆத்மி அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. அதாவது வரும் 25ம் தேதி முதல் டெல்லியில் பெட்ரோல், டீசல் நிரப்பும் வாகனங்கள் கட்டாயம் மாசு கட்டுப்பாடு சான்றிதழை (PUC) பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பக்கூடாது என உத்தரவிடப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தவுடன் இது நடைமுறைப்படுத்தப்படும் என்று டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் கூறியுள்ளார்.

தரம்
இதனை கண்காணிக்க 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறைகள் வரும் 3ம் தேதி முதல் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். டெல்லியில் தற்போது வரை காற்றின் தரம் மோசமான நிலையில்தான் இருக்கிறது. பொதுவாக காற்றின் தரக்குறியீடு AQI எனும் அளவீட்டில் கணக்கிடப்படும். இதன்படி 201-300 அளவில் இருந்தால் காற்றின் தரம் மோசமாக இருக்கிறது என்று அர்த்தம். அதேபோல 301-400 வரை இருந்தால் மிக மோசம், 401-450 வரை இருந்தால் காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். AQI அளவு 450க்கு மேல் இருந்தால் மிகக் கடுமையாக காற்றின் தரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று புரிந்துகொள்ளலாம்.தற்போது டெல்லியில் காற்றின் தரம் 200க்கும் அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications