அரசியல் சார்பின்றி போராட்டம் தொடரும்.. கட்சி தலைவர்களுக்கு அனுமதியில்லை.. விவசாயிகள் திட்டவட்டம்
டெல்லி: விவசாயிகளின் போராட்டம் அரசியல் சார்பின்றி தொடரும் என்றும் கட்சி தலைவர்களுக்குப் போராடும் இடங்களிலுள்ள மேடையில் பேச அனுமதியில்லை என்றும் விவசாயச் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் குறிப்பாகக் கடந்த இரண்டு மாத காலமாகத் தலைநகரில் பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு தின டிராக்டர் பேரணிக்குப் பின், போராடும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பிற்குக் குவிக்கப்பட்டுள்ள போலீசாரின் எண்ணிக்கையும் பல மடங்கு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்ட்சி எம்பிகள்
இந்நிலையில், நேற்று திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என 10 எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராடும் விவசாயிகளை நேரில் பார்க்க காசிப்பூர் போராட்ட களத்திற்குச் சென்றனர். இருப்பினும், விவசாயிகளைச் சந்திக்க அவர்களை டெல்லி போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து விவசாயிகள் போராட்டம் அரசியல் சாயம் பூச முயன்றனர்.
அரசியல் கட்சிகளுக்கு நோ
இது குறித்து விவசாயச் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் போராட்டம் தொடக்கம் முதலே அரசியல் சார்பின்றியே இருந்தது. இனிமேலும் அப்படியே தொடரும். அரசியல் கட்சியினர் எங்கள் போராட்டத்திற்கு அளிக்கும் ஆதரவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், போராட்ட களத்தில் உள்ள மேடையில் பேசக் கட்சித் தலைவர்களுக்கு அனுமதி இல்லை" என்று அதில் தெரிவிக்கப்பட்டது.
இணைய சேவை
போராட்ட தளங்களில் முடக்கப்பட்டுள்ள இணையச் சேவையை அரசு உடனடியாக திரும்ப வழங்க வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் குரலை அடைக்க அரசு தொடர்ந்து முயல்வதாகவும் விவசாயிகளைத் தவிர ஊடகவியலாளர்களும் உள்ளூர் மக்களும்கூட இணையச் சேவை முடக்கப்பட்டதால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தேர்வு நேரம் நெருங்கும் நிலையில், மாணவர்கள் இணையச் சேவையின்றி பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சரி இல்லை
விவசாயிகள் போராட்டம் குறித்து சர்வதேச அளவில் ஆதரவு பெருகி வரும் நிலையில், இதை உள்நாட்டுப் பிரச்னை என்று கூறி அடக்க முயல்வது சரி இல்லை என்றும் அதில் கூறப்பட்டிருந்தது. அதேபோல விவசாயிகளின் போராட்டங்களை கிண்டல் செய்யும் விதமாகப் பலர் இணையதளத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அது கண்டிக்கத்தக்கது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இதுவரை 125 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் பலர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..