மத்திய அரசு நலத்திட்டங்களைப் பெற தமிழக அமைப்பு சாரா தொழிலாளர் 37% பேர் மட்டுமே பதிவு!
டெல்லி: மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான இஷ்ராம் இணைய தளத்தில் தமிழகத்தின் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 37% பேர் மட்டும்தான் பதிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று, கொரோனா கால லாக்டவுனால் புலம் பெயர் தொழிலாளர்கள் சந்தித்த பிரச்சனைகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்ஆர் ஷா, ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி! மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தயாநிதி மாறன் தீவிரம்!
14 மாநிலங்களில் உணவு தானியங்கள் காலி
இந்த வழக்கில் சமூக ஆர்வலர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் ஆஜரானார். அவர் தமது வாதத்தில், புலம்பெயர் தொழிலாளர்களில் 94% பேர் ரூ10,000க்கும் குறைவான மாத ஊதியம் பெறுகின்றனர். அவர்களை மானிய விலையிலான உணவு தானியங்களைப் பெறுவதற்கு தகுதியானவர்களாக்க வேண்டும். ரூ10,000க்கும் குறைவான ஊதியம் பெறும் புலம் பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கை மட்டும் 25 கோடி என குறிப்பிட்டார். மேலும் 14 மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்களுக்கு குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) வழங்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டினார். அதேபோல் 14 மாநிலங்கள் தங்களது உணவு தானிய கையிருப்பு காலியாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளன எனவும் தெரிவித்தார் பிரஷாந்த் பூஷண்.
உ.பி, ஒடிஷாவில் அதிகம் பதிவு
மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பத், மத்திய அரசின் புலம் பெயர் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான இஷ்ரம் இணையதளத்தில் செப்டம்பர் மாதம் வரை சுமார் 28.26 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேசம், ஒடிஷா மாநிலங்களில் அதிக எண்ணிக்கையில் புலம் பெயர் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். சத்தீஸ்கர், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், இமாச்சல பிரதேச மாநிலங்களில் 90% தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் குறைவு
மகாராஷ்டிராவில் 38%; தமிழகம், கர்நாடகாவில் 37% பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். தெலுங்கானாவில் வெறும் 36% பேர்தான் மத்திய அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதற்கான புலம் பெயர் தொழிலாளர்களுக்கான இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு உத்தரவு
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், இந்தியாவின் கடைசி மனிதருக்கும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். எந்த ஒரு நபரும் இரவில் பட்டினியுடம் படுக்கைக்கு செல்லக் கூடாது. கொரோனா காலத்தில் உணவு தானியங்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்தது பாராட்டுக்குரியது. அது தொடர வேண்டும் என்று தெரிவித்தனர்.
அத்துடன் மத்திய அரசின் இஷ்ரம் இணையதளத்தில் பதிவு செய்த புலம் பெயர் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் எண்ணிக்கை விவரங்களை தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கு விசாரணைக்கு நாளை (டிசம்பர் 8)க்கு ஒத்திவைக்கப்பட்டது.