ஆபரேஷன் கங்கா: இன்று ஒரே நாளில்.. 19 விமானங்களில் 3726 இந்தியர்கள் வருகை! மத்திய அமைச்சர் பெருமிதம்
டெல்லி: ‛‛உக்ரைன் போரில் சிக்கி தவிக்கும் 3726 இந்தியர்கள் 19 விமானங்கள் மூலம் இன்று தாயகம் திரும்ப உள்ளனர்'' என மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதி்ராதித்ய சிந்தியா கூறியுள்ளார்.
உக்ரைனில் ஒருவாரமாக போர் நடந்து வருகிறது. ரஷ்யா-உக்ரைன் இடையே நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலும் தீர்வு ஏற்படவில்லை. இன்று 2ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இதற்கிடையே உக்ரைனின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்துகிறது. இதனால் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது.

மத்திய அரசு நடவடிக்கை
இந்தப் போர் ஆரம்பித்தது முதலே ஒட்டுமொத்த உக்ரைன் வான்வழியும் மூடப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. தாய்நாட்டுக்கு திரும்புவோர், பிற நாடுகளில் தஞ்சமடைய விரும்பும் உக்ரைன் மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இங்கு சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. இந்த மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

19 விமானங்களில் 3726 பேர்
இந்நிலையில் மத்திய விமானத்துறை அமைச்சர் ஜோதி்ராதித்ய சிந்தியா தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛ஆபரேஷன் கங்கா மூலம் இன்று 3726 இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர். புக்காரெஸ்ட்டில் இருந்து 8 விமானம், சுசிவாவில் இருந்து 2, கோசிஸில் இருந்து ஒன்று, புதாபெஸ்டில் இருந்து 5, ரிசோவில் இருந்து 3 என மொத்தம் 19 விமானங்களில் இவர்கள் வர உள்ளனர்''என குறிப்பிட்டுள்ளார்.

சுறுசுறுப்பு
அதாவது ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ‛ஆபரேஷன் கங்கா' என்ற பெயரில் உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றனர். இந்த பணியில் தனியார் விமானங்களுடன் இந்திய விமானப்படை விமானங்களும் இணைந்துள்ளன. அத்துடன் மீட்பு நடவடிக்கைக்கான ஒருங்கிணைப்பு பணியை மத்திய அமைச்சர்களான ஹர்தீப் சிங் புரி, ஜோதிர்ஆதித்ய சிந்தியா, கிரன் ரிஜூ, விகே சிங் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உக்ரைனின் போர் பதற்றம் இன்னும் தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இந்தியர்கள் மீட்பு பணி சுறுசுறுப்படைந்துள்ளது.

விரைவாக மீட்கணும்
இதற்கிடையே உக்ரைனில் இருந்து மீட்கப்பட்டு டெல்லி வந்தடைந்த மாணவர்கள் மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தனர். உஜ்ஜாலா குப்தா என்ற மாணவி கூறுகையில், ‛‛உக்ரைனில் சிரமப்படும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியனாக நான் பெருமைப்படுகிறேன். இருப்பினும் கீவ், கார்கிவ் பகுதியில் இந்திய மாணவர்கள் உள்ளனர். இவர்களையும் வேகமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். '' என வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications