புதுச்சேரியில் பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ்... முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
டெல்லி: எதிர்க்கட்சிகளின் அரசை கவிழ்க்கும் பாஜகவின் ஆப்ரேசன் லோட்டஸ், இப்போது புதுச்சேரியை அடைந்துள்ளதாக அம்மாநில முதல்வர் நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக அம்மாநிலத்தில் முதல்வராகக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான நாராயணசாமி உள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாரங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு எம்எலஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதன் காரணமாகக் காங்கிரஸ் அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்து வருட போராட்டம்.. நிறைவேறிய நாராயணசாமியின் கனவு.. ஆனாலும் பெரும் சோகம்
ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளவில்லை
இது குறித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அளித்துள்ள பேட்டியில், "மல்லடி கிருஷ்ண ராவ் மற்றும் ஜான் குமார் ஆகியோரின் ராஜினாமா கடிதத்தைச் சபாநாயகர் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. கிரண் பேடியின் மோசமான நடவடிக்கைகளால் தான் மல்லடி கிருஷ்ண ராவ் ராஜினாமா செய்தார். அனைத்து திட்டங்களையும் கிரண் பேடி தடுப்பதாலேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். அவர் இன்னும் எங்களுடன் தான் இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த முடியுமென்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.
கிரண் பேடி
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன், முதல்வர் நாராயணசாமியுடன் மல்லடி கிருஷ்ண ராவ்வும் டெல்லி சென்றிருந்தார். அப்போது புதுச்சேரி ஆளுநரை மாற்ற வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து தற்போது ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி விடுவிக்கப்பட்டுள்ளார். கிரண் பேடி குறித்து நாராயணசாமி கூறுகையில், "கிரண் பேடி எங்கள் அரசின் அன்றாட நிர்வாகத்தில் தொடர்ந்து தலையிட்டுவந்தார்.
மக்களுக்குத் தெரியும்
மாநிலத்தில் அவர் தொடர்ந்து பல பிரச்சினைகளை உருவாக்க முயன்றார். புதுச்சேரி மக்களுக்கு இது நன்றாகத் தெரியும். இதன் காரணமாகக் கடந்த நான்கு ஆண்டுகளாக அரசை நடத்துவது என்பதே எங்களுக்குக் கடினமான பணியாக இருந்தது. ஆனால் அதையும் மீறி காங்கிரஸ் அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியது" என்றார்.
ஆபரேஷன் லோட்டஸ்
மேலும் நாராயணசாமி கூறுகையில், "இது தான் பாஜகவின் பாணி. அவர்கள் எம்.எல்.ஏ.க்களை வாங்குவார்கள். இதையேதான் அவர்கள் மணிப்பூர், அருணாச்சல், குஜராத், கர்நாடகா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் செய்துள்ளனர். எதிர்க்கட்சிகளின் அரசைக் கவிழ்க்கும் பாஜகவின் ஆப்ரேசன் லோட்டஸ் இப்போது புதுச்சேரியை அடைந்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களை அவர்கள் வாங்குகிறார்கள். இது மிகவும் வெட்கக்கேடான ஒரு செயல்" என்றார்.
காங்கிரஸ் அரசு
30 உறுப்பினர்களைக் கொண்ட புதுச்சேரி சட்டமன்றத்தில் காங்கிரஸ் 15 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. திமுக(மூன்று பேர்) மற்றும் ஒரு சுயேச்சை உறுப்பினரின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டுமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளதால், நாராயணசாமி தலைமையிலான அரசு தற்போது பெரும்பான்மையை இழந்துள்ளது.