பொய் சொல்வதை நிறுத்துங்க.. வேளாண் சட்டத்தை வாபஸ் வாங்குங்க.. மோடிக்கு,எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்!
டெல்லி: வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறுவதை பிரதமர் நரேந்திர மோடி நிறுத்தி கொள்ள வேண்டும் என்றும் வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்டபல்வேறு கட்சிகள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பையும், விவசாயிகளுக்கு ஆதரவையும் அளிப்பதாக கூறியுள்ளனர்.
வேளாண் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம், ஆலோசனை விவசாயிகளுடனும், அது தொடர்பானவர்களுடன் சேர்ந்து நடைபெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
யார் தீவிரவாதி? வேளாண் சட்டத்தை எதிர்க்கும் ஆர்எஸ்எஸ் மோகன்பகவத்தும் தீவிரவாதியா? ராகுல் கொதிப்பு
மனு கொடுத்தனர்
மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் கிடைக்கவில்லை. வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என விவசாயிகளும் பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி உள்ளன. இது தொடர்பாக ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சியினர் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தும் மனு கொடுத்து உள்ளனர்.
கூட்டறிக்கை
இந்த நிலையில் வேளாண் சட்டத்தை உடனடியாக பிரதமர் மோடி திரும்ப பெற வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக அறிக்கை வெளியிட்டு உள்ளன. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திமுக,கம்யூனிஸ்ட் காட்சிகள், குப்கார் கூட்டமைப்பு, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திரும்ப பெறுங்கள்
வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் கூறுவதை பிரதமர் நரேந்திர மோடி நிறுத்தி கொள்ள வேண்டும். அவரது குற்றச்சாட்டு உண்மையை முழுமையாக கேலிக்கூத்தாக்குவதாகும்.வேளாண் சட்டங்களைத் பிரதமர் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களுக்கு எதிராக எங்களின் எதிர்ப்பையும், விவசாயிகளுக்கு எங்களின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் அளிக்கிறோம். முறையான விவாதம், ஆலோசனை இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை விவசாய சங்கங்கள் எதிர்க்கின்றன.
குறைக்கப்பட்டுள்ளன
தேர்தல் வாக்குறுதியில் வேளாண் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசியவர்கள் இப்போது எதிர்க்கிறார்கள் எனப் பிரதமர் மோடி பேசியுள்ளார். ஆமாம், நாங்கள் சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசினோம். இந்திய வேளாண்மையை வலுப்படுத்தும் சீர்திருத்தத்தைக் கோரினார்கள். விவசாயிகளின் வாழ்க்கையைச் செழுமையாக்கும் சீர்திருத்தத்தைக் கோரினார்கள். நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பு தொடர்ந்து உறுதி செய்யும் சீர்திருத்தத்தைப் பேசினார்கள். இதை தான் நாங்கள் பேசினோம். ஆனால், தற்போதுள்ள வேளாண் சட்டங்கள், இந்த நோக்கங்களைக் குறைத்து மதிப்பிட்டுள்ளன.
பொய் சொல்வது யார்
குறைந்தபட்ச ஆதார விலை குறித்து எதிர்க்கட்சிகள் பொய் பரப்புகிறார்கள் என்று பிரதமர் கூறியுள்ளார். சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்தியதாக அவர் தெரிவிக்கிறார். சுவாமிநாதன் அறிக்கையில், குறைந்தபட்ச ஆதார விலை சி2+50 சதவீதம் வழங்கப் பரிந்துரை செய்தது. ஆனால், மத்திய அரசு ஏ2+50 சதவீதம் மட்டுமே வழங்கியதுடன், சி2+50 சதவீதத்தை நடைமுறைப்படுத்த இயலாது என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதில் இருந்து தெரியும் யார் பொய்களைப் பரப்புகிறார்கள்.என்று.
கூட்டுங்கள்
தற்போதுள்ள வேளாண் சட்டங்களை, மின்சாரத் திருத்தச் சட்டத்தோடு சேர்த்து திரும்பப் பெற வேண்டும். வேளாண் சீர்திருத்தங்கள் தொடர்பான விவாதம், ஆலோசனை விவசாயிகளுடனும், அது தொடர்பானவர்களுடன் சேர்ந்து நடைபெற வேண்டும். இந்த விவாதங்கள் அடிப்படையில் புதிய சட்டங்கள் இயற்றுவது குறித்து நாடாளுமன்றம் பரிசீலிக்கும். தேவைப்பட்டால் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.