ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை முன்கூட்டியே ஜனாதிபதியிடம் கொடுக்க நாயுடு தீவிரம்!
Recommended Video
டெல்லி: தொங்கு நாடாளுமன்றம் அமைந்தால் எதிர்க்கட்சிகளை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் தேர்தல் முடிவுகளுக்கு முன்னரே கடிதம் கொடுத்துவிடவேண்டும் என்பதில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம்காட்டி வருகிறார்.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் சந்திரபாபு நாயுடு. மத்தியில் பாஜக எந்த சூழ்நிலையிலும் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதுதான் சந்திரபாபு நாயுடுவின் திட்டம்.
ஸ்டாலின் வீட்டுக்கு வந்து கேசிஆர் டீ சாப்பிட்டதெல்லாம் வீணாப் போச்சே.. குண்டைப் போட்ட எக்ஸிட் போல்!
ஜனாதிபதியிடம் கடிதம்
இது தொடர்பாகத்தான் எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைத்து வருகிறார். லோக்சபா தேர்தல் முடிவுகள் மே 23-ந் தேதி வெளிவருவதற்கு முன்னரே ஜனாதிபதியை நேரில் சந்தித்து, தொங்கு நாடாளுமன்றம் உருவானால் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கிறோம் என்கிற கடிதத்தை தந்துவிடலாம் என வியூகம் வகுத்துள்ளாராம் சந்திரபாபு நாயுடு.
சந்திரபாபு கணிப்பு
அப்படி முன்கூட்டியே கடிதம் தராவிட்டால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைத்தான் இயல்பாகவே ஆட்சி அமைக்க ஜனாதிபதி அழைப்புவிடுக்க வாய்ப்பு உள்ளது எனவும் சந்திரபாபு நாயுடு சுட்டிக்காட்டி வருகிறார். சந்திரபாபு நாயுடுவைப் பொறுத்தவரையில் பாஜக 200க்கும் குறைவான இடங்களைத்தான் பெறும் என கணக்குப் போட்டு இந்த காய் நகர்த்தலில் ஈடுபட்டு வருகிறார்.
முன்னுரிமை யாருக்கு?
ஆட்சி அமைப்பது தொடர்பான சர்க்காரியா கமிஷன், பூஞ்சி கமிஷன் அறிக்கைகளிலும் கூட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முதலில் உரிமை கோரினால் ஜனாதிபதி அந்த கட்சிகளைத்தான் முதலில் அழைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. இதனை முன்வைத்துதான் சந்திரபாபு நாயுடு தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.
மமதா எச்சரிக்கை
சந்திரபாபு நாயுடுவின் முயற்சிகளை மர்ம புன்னகையுடன் கவனித்து வருகிறார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி. தம்மிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய சந்திரபாபு நாயுடுவிடம், காங்கிரஸ் கட்சியை அப்படியே நீங்கள் முழுமையாக நம்பிவிட முடியாது. எனக்கு காங்கிரஸை பற்றி நன்றாகவே தெரியும்.. கவனமாகவே காய் நகர்த்துங்கள் என எச்சரிக்கை விடுத்தாராம்.
இடதுசார்கள் தயக்கம்
இதனிடையே சந்திரபாபுவின் இம்முயற்சிகளுக்கு இடதுசாரிகள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனராம். லோக்சபா தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை தருவதை ஏற்க முடியாது என தத்துவ விளக்கம் தந்து கொண்டிருக்கின்றனராம். எதிர்க்கட்சித் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டால் அவர்களது ஆதரவு கடிதங்களுடன் ஜனாதிபதியை உடனே சந்திப்பார் சந்திரபாபு நாயுடு என்கின்ற டெல்லி தகவல்கள்.