இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
டெல்லி: தமிழ்நாடு உட்பட நாடு முழுக்க இன்று 102 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், இதில் 60.03% வாக்குகள் பதிவாகி உள்ளன.
லோக்சபா தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு இன்று நடைபெற்றது. இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பல தலைவர்கள், அரசியல் பிரபலங்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

2019 லோக்சபா தேர்தலின் முதற்கட்டத்தில் 69.43% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை மாலை 7 மணி வரை 60.03% வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளது.
வாக்குப்பதிவு: மேற்கு வங்கம் மற்றும் மணிப்பூரின் சில பகுதிகளில் வன்முறைகள் நடந்த நிலையில், அதைத் தவிர பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. கூச் பெஹார் மாவட்டத்தில் உள்ள சிடல்குச்சியில் பாஜக ஆதரவாளர்கள் குழப்பத்தை உருவாக்கி தங்கள் கட்சியினர் தாக்கியதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டுகிறது.
அதேபோல மணிப்பூரில், தமன்போக்பியில் உள்ள ஒரு வாக்குச் சாவடி அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், ஐரோசெம்பா வாக்குச் சாவடியிலும் வன்முறை ஏற்பட்டது. இப்படிச் சிறு சலசலப்புகள் இருந்த போதிலும், மணிப்பூரில் (68.62%) மற்றும் வங்காளத்தில் (77.57%) வாக்குப்பதிவு அதிகமாகவே இருந்தது.
எவ்வளவு: இன்று மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரவு 7 மணி வரை 60.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் அதிகபட்சமாக 79.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதேபோல நாகாலாந்தின் ஆறு கிழக்கு மாவட்டங்களில் உள்ள வாக்குச்சாவடி தேர்தல் அதிகாரிகள் காலை முதல் மாலை வரை காத்திருந்தனர். ஆனால் அங்குள்ள நான்கு லட்சம் வாக்காளர்களில் ஒருவர் கூட வாக்களிக்க முன்வரவில்லை. கிழக்கு நாகாலாந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு தேர்தலைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்த நிலையில், பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை.
மாநிலங்கள்: இந்த முதற்கட்ட தேர்தல் என்பது தமிழகம் (39), உத்தரகண்ட் (5), அருணாச்சல பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1) ஆகிய அனைத்துத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ), புதுச்சேரி (1), சிக்கிம் (1) மற்றும் லட்சத்தீவு (1). மேலும், ராஜஸ்தானில் 12, உத்தரப் பிரதேசத்தில் 8, மத்தியப் பிரதேசத்தில் 6, அசாம் மற்றும் மகாராஷ்டிராவில் தலா 5, பீகாரில் 4, மேற்கு வங்கத்தில் 3, மணிப்பூரில் 2, காஷ்மீர், சத்தீஸ்கர். திரிபுரா தலா ஒரு தொகுதிகளில் நடைபெற்றது.
கடந்த 2019 லோகசபா தேர்தலில் இந்த 102 இடங்களில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 41 இடங்களை வென்றது.. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 45 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை ஆளும் என்டிஏ தரப்பிற்கும் இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications