இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கோரி மனு.. ஆதாரம் இருந்தால் தாங்க! உச்ச நீதிமன்றம் உத்தரவு
புதுடெல்லி: இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், வலுவான ஆதாரங்களை அளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.
இந்தியாவில் தற்போது 6 மதங்களை சேர்ந்தவர்கள் சிறுபான்மை இன மக்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பெளத்தீஷ்ட்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் சமூம் என 6 மதத்தை சேர்ந்தவர்கள் மத சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய சிறுபான்மை ஆணைய சட்டம் பிரிவு 2 (சி) இந்தியாவில் சிறுபான்மையாக உள்ள மதத்தினர் குறித்து வரையறுத்துள்ளது.

பொதுநல வழக்கு
இந்த நிலையில், இந்து மத தலைவர்களில் ஒருவரான தேவ்கிந்தன் தாகூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். தேசிய சிறுபான்மை ஆணைய சட்டம் பிரிவு (2)க்கு எதிராக அவர் தாக்கல் செய்த மனுவில், மாவட்ட வாரியாக சிறுபான்மையினரை அடையாளம் காண வேண்டும் எனவும், மாநில வாரியாக சிறுபான்மையினருக்கான அந்தஸ்து அளிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்க முடியாது
இந்த மனு இன்று(திங்கட்கிழமை) உச்ச நீதிமன்ற நீதிபதி யூயூ லலித் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர், 1993 அறிவிப்பு ஆணையின் படி முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தீஷ்ட்கள், பார்சிக்கள், சீக்கியர்கள், ஜெயின் ஆகிய 6 மதத்தினர் மட்டுமே தேசிய அளவில் சிறுபான்மையினராக கருதப்படுகிறார்கள். சிறுபான்மையினர்கள் மாநிலங்களால் அறிவிக்கப்பட வேண்டும் என்று பல நீதிமன்றங்கள் தீர்ப்பு கூறியுள்ளன. இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்படுவதைப் பற்றியே நாங்கள் பேசுகிறோம். இந்துக்கள் சிறுபான்மையினராக இருக்க முடியாது என்று இங்கு நம்பப்படுகிறது.

நீதிபதி கருத்து
அப்போது குறுக்கிட்ட நீதிபதி யூயூ லலிட், "மிசோரம் அல்லது காஷ்மீர் மாநிலங்களில் இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து மறுக்கப்படுவதாக வலுவான ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியும். சிறுபான்மை தொடர்பான அனைத்து விவகாரங்களும் மாநில வாரியாக ஆய்வு செய்யப்படாது" என்று தெரிவித்தார். மேலும், 2 வாரங்கள் கழித்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

உறுதியான தீர்வு
இதேபோன்ற ஒரு வழக்கை நடப்பு ஆண்டு துவக்கத்தில் உச்ச நீதிமன்றம் விசாரித்து இருக்கிறது. அப்போது மாறுபட்ட நிலைப்பாட்டை மத்திய அரசு எடுத்து இருந்தது. அப்போது கூறிய நீதிமன்றம், மாநில அளவில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரை அடையாளம் காணும் பிரச்சினைக்கு உறுதியான தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியது. மேலும், "வெவ்வேறு நிலைப்பாடுகளை எடுப்பது இதில் உதவாது" என்று கூறியது.

மாநிலமே அறிவித்துக்கொள்ளலாம்
சிறுபான்மையினரை அறிவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது என்றும், இது தொடர்பாக மாநிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடன் ஆலோசித்த பிறகே எந்த முடிவும் எடுக்கப்படும் என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருந்தது. முன்னதாக, எந்த ஒரு சமூகத்தையும் சிறுபான்மையினராக மாநில அளவில் சம்பந்தப்பட்ட மாநிலமே அறிவித்துக்கொள்ளலாம் என்று கூறியிருந்ததுக் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications