பிரதமர் மோடி போட்டியிடுவதாக சொல்லப்படும் ராமநாதபுரம் தொகுதி- இப்படியும் ஒரு சரித்திரம் இருக்கிறதே!
டெல்லி: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி போட்டியிடுவதாக சொல்லப்படுகிற தமிழகத்தின் ராமநாதபுரம் லோக்சபா தொகுதி சரித்திரங்கள் பல கண்ட தொகுதி. ராமநாதபுரம் சீமையின் மகாராஜாவான சேதுபதி மன்னரை ஒரு சாமானியன் ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் தோற்கடித்து மண்ணை கவ்வ வைத்த வரலாறு நிகழ்ந்திருக்கிறது.
பிரதமர் மோடி 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா, உ.பி. வாரணாசி ஆகிய 2 லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டு வென்றார். பின்னர் வதோதரா தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது வாரணாசி லோக்சபா தொகுதி எம்பியாக இருக்கிறார்.
லோக்சபா தேர்தல்:ராமநாதபுரம்- மோடி; கன்னியாகுமரி- ராகுல் அல்லது பிரியங்கா போட்டி? களைகட்டும் தமிழகம்?
2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி, தமிழகத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடக் கூடும் என்கிற தகவல்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகத போதும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. பாஜகவை கடுமையாக எதிர்க்கக் கூடிய தமிழகத்தில் பிரதமர் மோடி போட்டியிடுகிறார் என்கிற தகவல் பெரும் ஆச்சரியத்தை தந்துள்ளது.
கடந்த காலங்களில் தஞ்சாவூரில் இந்திரா காந்தி போட்டியிடுவார் என கூறப்பட்டது. ஆனால் போட்டியிடவில்லை. இதேபோல் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோரும் போட்டியிட வேண்டும்; போட்டியிடுவார்கள் என்றெல்லாம் கூறப்பட்டாலும் அப்படி எதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி ராமநாதபுரத்திலும் ராகுல் காந்தி அல்லது பிரியங்கா காந்தி கன்னியாகுமரியிலும் போட்டியிடலாம் என்கிற யூகங்கள் பரவ தொடங்கி இருக்கின்றன.
பிரதமர் மோடி போட்டியிடலாம் என கருதப்படும் ராமநாதபுரம் தொகுதியின் வரலாறு விசித்திரங்கள் நிறைந்தது. அரசியல் சென்டிமெண்ட்டை அடிப்படையாகவும் கொண்டது. ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர் ஆகிய சட்டசபை தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. காங்கிரஸ் மற்றும் திராவிட கட்சிகளே ராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் சட்டசபை தொகுதியின் சரித்திரம் மிக முக்கியமானது. 1952-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சேதுபதி சீமையின் மகாராஜாவான மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி, காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார். 1957-ல் மீண்டும் சுயேட்சையாகவே போட்டியிட்டு மீண்டும் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி வாகை சூடினார். 1962-ல் 3-வது முறையாக ஹாட்ரிக் வெற்றியாக மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி, காங்கிரஸ் வேட்பாளராக வெற்றி பெற்றார். 1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலிலும் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி போட்டியிட்டார். அத்தேர்தலில் திமுக, மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதிக்கு எதிராக குதிரை வண்டி ஓட்டுகிற சாமானியன் தங்கப்பன் என்பவரை வேட்பாளராக அறிவித்தது. அத்தனை பேரும் மன்னர் 4-வது முறையாக வெல்வார் என நம்பிக்கையோடு இருந்தனர்; ஆனால் மக்களோ தங்கப்பன் என்ற சாமானியனை எம்.எல்.ஏ.வாக்கி சரித்திரம் படைத்தனர். ராமநாதபுரம் சீமையை ஆண்ட மகாராஜா சண்முக ராஜேஸ்வர சேதுபதி, ஜனநாயக தேர்தலில் மண்ணை கவ்வினார். ஜனநாயகம் என்பது எத்தகைய வலிமையானது என்பதை வெளிப்படுத்தியது தங்கப்பனின் வெற்றி.
இதே ராமநாதபுரம் தொகுதிக்கு ஒரு சென்டிமெண்ட் அல்லது நம்பிக்கை பொதுவாக இருந்து வருகிறது. ராமநாதபுரம் சட்டசபை தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர் வெல்கிறாரோ அந்த கட்சிதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்பதுதான் அந்த நம்பிக்கை. இந்த பின்னணி கொண்ட ராமநாதபுரம் சட்டசபை தொகுதி, பிரதமர் மோடி போட்டியிடலாம் என சொல்லப்படுகிற ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்குள் வருகிறது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் கடந்த முறை பாஜக போட்டியிட்டது. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்ல்ம் லீக்கின் நவாஸ் கனி, அதிமுக கூட்டணியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் போட்டியிட்டனர். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஆனந்தன், நாம் தமிழர் கட்சியின் புவனேஸ்வரி, மநீமவின் விஜயபாஸ்கர் ஆகியோரும் களம் கண்டனர். திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனி 4,69,943 (44.08%) வாக்குகள் பெற்றி வென்றார். பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3,42,821 (32.16%) வாக்குகளைப் பெற்று தோல்வி அடைந்தார். அமமுகவின் ஆனந்த் 1,41,806, நாம் தமிழர் கட்சியின் புவனேஸ்வரி 46,385 வாக்குகளையும் பெற்றனர். அதற்கு முந்தைய தேர்தலில் அதிமுக 4,05,945, திமுக 2,86,621, பாஜக 1,71,082, காங்கிரஸ் 62,160 வாக்குகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.