முதல்வர்களுடனான மோடி ஆலோசனை முடிந்தது.. லாக்டவுனை நீட்டிக்க ஒருமித்த குரலில் ஒலித்த முதல்வர்கள்!
டெல்லி: கொரோனா நோய் தடுப்பு, லாக்டவுன் நீட்டிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பிரன்ஸிங்கில் நடத்திய ஆலோசனை முடிந்தது. இதில் ஏப்ரல் 30 வரை லாக்டவுனை நீட்டிக்க வேண்டும் என முதல்வர்கள் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.
Recommended Video
கொரோனா தடுப்புக்காக நாடு முழுக்கவும் 21 நாள் லாக்டவுனில் வைக்கப்பட்டுள்ளது. இன்று லாக்டவுனின் 18வது நாள் ஆகும். வரும் செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14ம் தேதியுடன் லாக்டவுன் நிறைவடைகிறது.
இந்த நிலையில் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டுமா என்று முதல்வர்களுடனான கூட்டத்தில் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் பங்கேற்றார்.
சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து முதல்வர்களும் லாக்டவுனை வரும் ஏப்ரல் 30 வரை நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனால் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மட்டும் லாக்டவுன் நீட்டிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
இந்தியாவில் லாக்டவுனை நீட்டிக்க பிரதமர் முடிவு.. டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ட்வீட்
பல்வேறு கட்சிகளின் தலைவர்களுடன் சமீபத்தில் மோடி ஆலோசனை நடத்தியிருந்தார். அவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, ஏப்ரல் 14 ஆம் தேதி லாக்டவுனை எல்லா இடங்களிலும் நீக்க முடியாது என்று தெளிவுபடுத்தியிருந்தார். அதேநேரம், சில பகுதிகளில் தளர்வு இருக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் முன்னுரிமை "ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதாகும்" என்று மோடி கூறி வருவதை பார்த்தால் லாக்டவுன் இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது. எனினும் இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வந்தால் மட்டுமே ஒரு முடிவுக்கு வர முடியும்.
ஒடிசா, பஞ்சாப் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே, மேலும் 2 வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.