மன்னிப்பு கேட்க முடியாது.. என்ன தண்டனையையும் ஏற்க தயார்.. பிரசாந்த் பூஷன் அறிவிப்பு
டெல்லி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, இருசக்கர சொகுசு வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் அமர்ந்திருந்த படம் ஒன்று வெளியானது. இதனை தமது சமூக வலைதளப் பக்கங்களில் பிரசாந்த் பூஷன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதேபோல் நீதித்துறை, முன்னாள் நீதிபதிகளை பிரசாந்த் பூஷன் தொடர்ந்து விமர்சித்து வருவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அவருக்கான தண்டனை குறித்து இன்று அறிவிக்கப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
பொதுவாக நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் ஒருவர் குற்றவாளி எனில் அவருக்கு 6 மாதம் சிறை தண்டனை, ரூ2,000 அபராதம் ப்ளஸ் சிறை தண்டனை விதிக்கப்படும்.
இந்த நிலையில் பிரசாந்த் பூஷன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமையன்று ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், பிரசாந்த் பூஷன் சீராய்வு மனுவைத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. ஆகையால் தண்டனை தொடர்பான இன்றைய விவாதங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மக்களே.. எல்லாரும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கங்க... ஏன் தெரியுமா? WHO முக்கிய வார்னிங்
இந்நிலையில் பிரசாந்த் பூஷனின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. தண்டனை வழங்கப்பட்ட பின்னரே தீர்ப்பு வெளியாகும் என்று கூறியது. அத்துடன் நாங்கள் உங்களைத் தண்டித்தாலும், அது மறுபரிசீலனை செய்யப்படும் வரை அது செயல்படுத்தப்படாது. நாங்கள் நியாயமாக இருப்போம். இந்த பெஞ்சைத் தவிர்க்க நீங்கள் முயற்சிக்கிறீர்கள் என்று நாங்கள் நினைக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், உச்ச நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார் என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.